கைதிகள் விவகாரம்: அரசியல் தீர்மானமே தேவை – சுரேஷ்; இன்று தீர்வு தருவார் மைத்திரி – சம்பந்தன்
“தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தைச் சட்டப் பிரச்சினையாகப் பார்க்காது அரசியல் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
அரசியல் கைதிகள் விடயத்தில் அரசியல் தீர்மானமொன்றையே தற்போது எடுக்கவேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசியல் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா ? ஜனாதிபதி மற்றும் பிரதமர் அத்தகைய நிலைக்கு வந்துள்ளார்களா என்பது அடுத்த கேள்வியாகும்.
இந்நிலையில் இவர்கள் இதனைச் சட்ட பிரச்சினையாக பார்க்கின்றார்களே தவிர அரசியல் பிரச்சினையாகப் பார்க்கவில்லை.
கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரின் கருத்துப்படி பார்க்கும்போது இவர்களும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தைச் சட்டப் பிரச்சினையாகவே பார்க்கின்றார்கள். அவ்வாறாயின் கூட்டமைப்பினர் அவர்களை அரசியல் கைதிகளாகப் பார்க்காது பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றார்கள். அவர்களை விடுதலை செய்வதற்கு அரசியல் தீர்மானத்தையே எடுக்க வேண்டும்” – என்றார்.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக இன்று புதன்கிழமை நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு தீர்வை வழங்குவார் என்று நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“ஜனாதிபதியுடன் பேச்சு நடத்திய போது, அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு எதிர்வரும் 17ஆம் திகதி (இன்று) ஒரு தீர்வை வழங்குவதாக உறுதியளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியைச் சந்தித்த போது, இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுடன் கலந்துரையாடுவதாகவும், அதன் பின்னர் 17ஆம் திகதி (இன்று) ஒரு தீர்வை வழங்குவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துடன் ஜனாதிபதிக்கு உடன்பாடு உள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தமது கொள்கையை இலங்கை அரசு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியுள்ளது.
அந்த வாக்குறுதிகளை விட, ஜனாதிபதி குறிப்பிட்ட நாளில் தீர்வை வழங்குவதாக கூறியுள்ளார். எனவே, சாதகமான முடிவுகளை நாங்கள் எதிர்பார்க்க முடியும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.