சம்பள உயர்வுகோரி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்
ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரி அட்டன், செனன் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (16) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அட்டன் – கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.
கூட்டுஒப்பந்தம் தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே நடைபெற்ற பேச்சு நேற்று தோல்வியடைந்த நிலையில், தொழிலாளர்களின் பலத்தை காட்டும் வகையிலேயே இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கருப்புக்கொடிகளை ஏந்தியவாறு பிரதான களமிறங்கிய தொழிலாளர்கள், பிரதான வீதியில் அமர்ந்து, நியாயமான சம்பள உயர்வுகோரி போராடினர். இதையடுத்து இவ்வீதியின் ஊடான போக்குவரத்து சில மணிநேரம் தடைபட்டது.
இதையடுத்து களத்துக்குவந்த அட்டன் பொலிஸார், தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துச்சென்றனர். போக்குவரத்தும் வழமைக்குத் திரும்பியது.
1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால், மலையகமெங்கும் போராட்டம் வெடிக்கும் என்று தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மு.இராமச்சந்திரன்