ஆவாகுழு பயங்கரமான அமைப்பு அல்ல – அதை அடக்குவதற்கு பொலிஸாரே போதும்!
தென்னிலங்கையில் கூறப்படுவதுபோல் ஆவாகுழுவானது படுபயங்கரமான அமைப்பு அல்ல என்று வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் சட்டம், ஒழுங்கு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
“ நாட்டில் ஏனையப் பகுதிகளில் இடம்பெறுவதுபோல்தான் வடக்கிலும் சிற்சில சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. ஆவாகுழு பயங்கரமான அமைப்பு கிடையாது.
யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் முதலான நான்கு பொலிஸ் பிரிவுகளிலேயே ஆவா குழுவின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. மேற்படி குழுவினால் எவரும் கொலை செய்யப்படவில்லை. சிறுஅளவிலான காயங்களே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பொலிஸாரால் இக்குழுவை கட்டுப்படுத்த முடியும். இதுவிடயத்தில் படைத்தளபதி வேறுகோணத்தில் பார்க்கலாம். ஆவாகுழு பிளவுபட்டுள்ளதுடன், பலமிழந்த குழுவாகவே இருக்கின்றது.
அதேவேளை, ஆவா குழுவினருடன் தொடர்புடையவர்களின் புகைப்படங்களையும், குறித்த ஊடக சந்திப்பில் வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெளியிட்டார்.