மகஸின் சிறையிலும் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!
கொழும்பு, மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் நேற்றுப் புதன்கிழமை காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தம்மைப் புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுவிக்க வேண்டும் என்று கோரியும், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும், அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் கடந்த மாதம் 14ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்
அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள மேலும் நான்கு அரசியல் கைதிகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இந்த நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய மூன்று சுற்றுப் பேச்சுக்களில் சாதகமான முடிவுகள் எட்டப்படாத நிலையில், மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகளும், நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.