இனபாகுபாடின்றி நீதியாக செயற்படுவேன்! – சம்பந்தனிடம் கிழக்கு ஆளுநர் உறுதி
“எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நீதியாகவும், நேர்மையாகவும் எனது பணிகளை முன்னெடுப்பேன்.”
– இவ்வாறு கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்தார்.
கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை இன்று வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தார்.
இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும், கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறும் கேட்டுக்கொண்ட கூட்டமைப்பின் தலைவர், தமது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், “தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்களைத் தங்கி நிற்கின்றார்கள்.
கடந்த காலங்களில் அரச நியமனங்கள், பாடசாலை போன்ற விடயங்களில் மாகாண நிர்வாகத்தில் அவர்களுக்கு அநியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
அவ்வாறான எவ்வித அநியாயங்களும் எதிர்காலத்தில் நடந்துவிடக்கூடாது.
தமிழ் மக்கள் போரில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் எந்த அரசோடும் இணைந்து அமைச்சுக்களைப் பெற்றுக்கொள்ளாமல் தமது உரிமைககளைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று வரை போராடி வருகின்றார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் தமிழ் பேசும் ஒருவர்.
நேற்று ஆளுநர் செயலகத்தில் சகல இன மக்களையும் சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டறிந்தீர்கள்.
இது சந்தோசமான – வரவேற்கத்தக்க விடயம்.
தமிழ் – முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் அதேவேளை, தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கல்வி, நிர்வாகம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நீங்கள் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும்” என்று சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது, தனது பணிகளை நீதியாகவும், நேர்மையாகவும் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்தார்.