அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மிகத் தீவிர கவனம்! – சம்பந்தனிடம் அவரே தெரிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை சம்பந்தமாக தான் தீவிர கவனம் செலுத்தியுள்ளார் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

பிற்பகல் 3 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குரிய அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாகவும், பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதியுடன் தனிப்பட்ட ரீதியில் கூட்டமைப்பு எம்.பிக்கள் பேச்சு நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், 5 மணிக்கு நிறைவடையவிருந்த கூட்டமானது 5.30 மணிவரை நீடித்ததாலும், மாலை 6 மணிக்கு ஜனாதிபதி தவிர்க்கமுடியாத முக்கிய கூட்டமொன்றில் பங்கேற்க இருந்ததாலும், அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் குறித்து கூட்டமைப்பு எம்.பிக்களுடன் நீண்டநேரம் பேச்சு நடத்த முடியாமல்போனது.

எனினும், ஓரிரு நிமிடங்கள் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பிக்கள் குழுவுடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சு நடத்திய ஜனாதிபதி, அரசியல் கைதிகள் விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் தான் தீவிர கவனம் செலுத்தியுள்ளார் என்றும், இது தொடர்பில் கூட்டமைப்புடன் தொடர்ந்தம் பேச்சுக்கள் நடத்துவார் என்றும் உறுதியளித்தார்.

அத்துடன், பேச்சுக்கான திகதி ஓரிரு தினங்களில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *