கொக்குவில் ஆலயமொன்றில் சிக்கின பெருமளவு வாள்கள்!
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களால் கொக்குவில் ஆலயம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்களும் மர்ம நபர்கள் அணியும் ஆடைகளும் மீட்கப்பட்டன.
சட்டவிரோதக் கும்பல் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் இன்று வியாழக்கிழமை காலை சுன்னாகம் பகுதியில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 20 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோண்டாவில் மற்றும் தெல்லிப்பளைப் பகுதிகளைச் சேர்ந்த இவர்களிடமிருந்து 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அவர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் கொக்குவிலிலுள்ள இந்து ஆலயம் ஒன்றின் கோபுரத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கூரிய ஆயதங்களும் மீட்கப்பட்டன.
ஆறு கைக்கோடரிகள் மற்றும் மூன்று வாள்கள், மர்ம நபரைப்போல அடையாளம் தெரியாத முறையிலான இரண்டு ஆடைகள் என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டன என்று சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.