திலீபன் நினைவேந்தலுக்கு ஆதரவாக மணிவண்ணனும் மன்றில் முன்னிலை!
தியாகி திலீபன் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்துவதற்கு நீதிமன்றில் பொலிஸார் செய்துள்ள விண்ணப்பம் தொடர்பான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறும் போது தாமும் நீதிமன்றில் முன்னிலையாவார் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப் பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தியாகி திலீபனின் நினைவேந்தலைத் தடுப்பதற்காகப் பொலிஸார் யாழ். நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துள்ளமை குறித்து நாமும் கவனம் செலுத்தியுள்ளோம்.
காந்தி உண்ணாவிரதம் இருந்தால் அது அஹிம்சை. திலீபன் உண்ணாவிரதம் இருந்தால் அது பயங்கரவாதமா?
திலீபனின் நினைவு நிகழ்வைத் தடுக்கும் பொலிஸாரின் இந்த விண்ணப்பம் தொடர்பில் எமக்குப் பலத்த சந்தேகங்கள் உள்ளன. இவற்றின் பின்னால் அரசியல் சக்திகள் உள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
இந்த விண்ணப்பம் தொடர்பான விசாரணை நாளை நீதிமன்றத்தில் இடம்பெறும்போது நானும் மேலும் சில சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராவோம்” – என்றார்.