உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதி ஒருவர் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 8 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் கொழும்பு, வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு நேற்று மாலை மாற்றப்பட்டுள்ளார்.
தில்லைராஜ் சிவசுப்பிரமணியம் என்ற அரசியல் கைதியே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலைமையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கைதி ஒரு நீரிழிவு நோயாளி என்றும், அத்தகையவர் உண்ணாவிரதம் இருக்கும்போது அவருக்கான மருந்துகளைத் தாம் பரிந்துரை செய்ய முடியாது என்றும் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியர்கள் தெரிவித்தமையை அடுத்தே அவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.