இலங்கை அணிக்கு பலப் பரீட்சை!
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கடும் அழுத்தத்தின் மத்தியில் இலங்கை இன்றைய போட்டியில் களமிறங்குகின்றது.
தொடரின் ஆரம்ப போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெறும் என்பதால் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சுப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவதற்கு இன்றைய போட்டி இலங்கை அணிக்கு முக்கியமானது. இருந்தாலும் இலங்கை அணி அண்மைக்காலமாக வெளிப்படுத்தும் ஆற்றல்கள் தொடர்பாக இரசிகர்கள் திருப்தியுடன் இல்லை என்றே கூறலாம். பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற போட்டியின் முடிவு இரசிகர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடவும் முடியாது. ஏனெனில் அண்மையில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற அவ்வணி சிறந்த ஆற்றல்களை அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்றது. இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் அவர்களது வீரர்கள் பெற்ற அனுபவங்கள் அவ்வணிக்கு சாதமாக இருக்கும்.
இலங்கை அணியும் இன்றைய போட்டியில் பல புதிய வியூகங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டியில் இலங்கை வெற்றிபெற்றாலும், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்தே இலங்கை அணியின் அடுத்த சுற்று உறுதியாகும்.
– பேனா-