இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறது?
நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் அனைத்தும் தென்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள விசேட செயலணி அரசியல் யாப்புக்கு விரோதமானதாகும்.
நாட்டின் புகழ்மிக்க அரச சேவையை குறித்த விசேட செயலணியின் கீழ் கொண்டு வருவதானது நாட்டை முழுவதுமாக இராணுவ ஆட்சிக்குள் தள்ளிவிடுவதை போன்றதாகும்.
நாட்டில் சுயாதீன அரச சேவை, அரச சேவைகள் ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்படுவதாக தெரிவித்த அவர் ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள செயலணி வழங்கும் உத்தரவிற்கமையவே அரச சேவை செயற்பட வேண்டியுள்ளது.
இது நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான அறிகுறியாகும். இந்த நிலைமை ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளார்.