ரணில் விக்கிரமசிங்கவுக்கு ‘பதவி ஆசைப் பைத்தியம்’ – இப்படிக் கூறுகின்றார் மஹிந்த
“ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை முட்டிமோதுகின்றது. அதன் நிலமை பரிதாபமாக இருக்கின்றது. ரணிலுக்குள்ள பதவி ஆசைப் பைத்தியத்தால்தான் அந்தக் கட்சி இன்று சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்துள்ளது.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
‘ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைவாக ஜனாதிபதி வேட்பாளர் நான்தான். இருப்பினும், எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பேன்’ என்று பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பல தேர்தல்களில் தோல்வியடைந்த ரணில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்குத் தகுதியற்றவராவார். அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க அந்தக் கட்சியிலுள்ளவர்கள் விரும்பவேமாட்டார்கள். அதையும் மீறி அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் தோற்பது உறுதி.
ஐ.தே.கவின் சார்பில் எவர் களமிறங்கினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தோற்கடித்தே தீரும். எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சதான். அதில் மாற்றம் எதுவுமில்லை. எந்த வேட்பாளரையும் தோற்கடிக்கும் வல்லமை அவருக்கு உண்டு” – என்றார்.