புத்தரிசி பெருவிழாவில் ‘ரணில் – மைத்திரி சங்கமம்’!
வரலாற்றில் அதிகளவிலான நெல் அறுவடை இம்முறை கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்காலத்தில் அந்த நிலைமையினை மேலும் விருத்தி செய்து கொள்வதற்காக விவசாயத்துறை மற்றும் நெல் உற்பத்திகளை நவீனமயப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அநுராதபுரம் ஜய ஸ்ரீமகாபோதிக்கு அருகாமையில் இடம்பெற்ற புத்தரிசி பெருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
” புத்தரிசி விழாவானது இற்றைக்கு இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே எமது முன்னோர்கள் மேற்கொண்டு வருகின்ற சம்பிரதாய நிகழ்வாகும். அதனை சிங்கள கலாச்சாரத்தின் ஒர் பகுதியாக குறிப்பிட முடியும்.
சோறு சாப்பிடுவதை மையமாகக் கொண்ட இனமாகிய எமது உயிரானது, வெற்றிகரமான விவசாயத்துறையிலேயே தங்கியுள்ளது.
அன்றைய காலத்தில் எமது மூதாதையர்கள் மல்வத்து ஓயா ஆற்றுப்பள்ளத்தாக்கு, யான் ஓயா ஆற்றுப்பள்ளத்தாக்கு மற்றும் மகாவலி கங்கை ஆற்றுப்பள்ளத்தாக்கு ஆகியவற்றினை மையமாகக் கொண்டு விவசாயத்தினை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அதேபோன்று தமது கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட சிறு குளங்கலுக்கருகில் நெற் பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்தனர். இவையனைத்துக்கும் மழைநீரும் அவசியமானது. அதனால் வெற்றிகரமான அறுவடையின் இறுதியில் அதன் மூலம் பெறப்படுகின்ற முதலாவது அறுவடையினை கடவுளுக்கு படைத்து பூஜைகளை மேற்கொள்வது சம்பிரதாயமாக பின்பற்றப்பட்டு வந்தது.
கடவுளுக்கு படைத்து பூஜைகளை மேற்கொள்ளும் சம்பிரதாயமானது மகிந்த தேரரின் வருகையுடன் ஜய ஸ்ரீமகாபோதிக்கும், கிராம விகாரைகளுக்கும் படைத்து பூஜைகளை நடாத்துவது வரை மாற்றமடைந்தது. அன்றைய காலத்தில் அவ்வாறாக நாகரீகம் மாத்திரமல்ல பொருளாதாரமும் கட்டியெழுப்பப்பட்டது.
இலங்கைக்கு அதன் ஊடாக அதிகளவிலான வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று அன்றைய காலத்தில் பொதுமக்களிடம் வரிப்பணமும் அறவிடப்பட்டது. அதன் ஊடாகவும் அதிகளவிலான வருமானம் ஈட்டப்பட்டது.
இன்று வரி அறவிடும் போது அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதற்கு முன்னர், அன்றைய மன்னர்களின் ஆட்சி காலத்தில் பராக்கிரமபாகு மன்னரும் வரிகளை விதித்தமையினை நினைவிற் கொள்ள வேண்டும்.
சிங்கள மன்னர்களின் காலத்தினை போன்று டி.எஸ். சேனாநாயக்க ஷ மீண்டும் நெற் பயிர்செய்கையினை விருத்தி செய்தார். அவரது காலத்தில் அதிகமான புராதன குளங்கள் புனரமைக்கப்பட்டன.
அதேபோன்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஷகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக மன்னர்களின் காலத்தில் கூட மேற்கொள்ளப்படாத நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டன.
அந்த பாதையில் பயணித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , விசாலமான நீர்ப்பாசன வேலைத்திட்டமான மொரகஹகந்தை வேலைத்திட்டத்தினை ஆரம்பித்தார். நீர்ப்பாசன அபிவிருத்திக்காக எமது அரசாங்கம் விசாலமான நிதியினை ஒதுக்கியுள்ளது.
2003ம் ஆண்டாகும் போது எமது அரசாங்கம் அரிசி உற்பத்தியில் தன்னிறைவடைந்த நாடாக இருந்தது. எனினும் கடந்த காலங்களில் காணப்பட்ட வறட்சியினால் பல்வேறு பிரதேசங்களில் பயிர்செய்கையில் ஈடுபடுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது. எனினும் கடவுளின் புண்ணியத்தினால் எமக்கு மீண்டும் மழை நீர் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
இம்முறை நெல் அறுவடையானது 30 இல்டசம் மெட்ரிக் தொன்களாகும். போகமொன்றில் அதிகளவான அறுவடைக் கிடைத்த பருவமாக இந்த வருடத்தினை குறிப்பிட முடியும். அதனால் கடவுளுக்கு பூஜை செய்து நன்றி தெரிவிப்பதோடு, பயிர் செய்கைக்காக தம் உழைப்பினை வியர்வையாக சிந்திய விவசாயிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் வடக்கு மத்திய பிராந்திய பிரதான சங்கநாயக அடமஸ்தானாதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய பள்ளேகம தம்மரக்கித ஸ்ரீநிவாச தேரர் உட்பட மகா சங்கத்தினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன், பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க,
வீரகுமார திசாநாயக்க, நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அநுராதநாயக ஆகியோர் உட்பட அரசியல்வாதிகள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.