மே 1 முதல் 39 நாடுகளுக்கு புதிய வீசா நடைமுறை! அமைச்சரவை ஒப்புதல்
இலங்கை சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில், 39 நாடுகளுக்கு on arrival visa முறையை அமுல்படுத்த, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.
இலங்கை சுற்றுலாத்துறையை மிகவும் இலகுவாக்கும் நோக்கில், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு புது முயற்சியாக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 39 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு இலகுவாக வரும் விதமாக, இந்த on arrival visa முறை அமுல்படுத்தப்படவுள்ளது.
இக்காலப்பகுதியில் கிடைக்கும் பிரதிபலன்களின் பிரகாரம், மேற்படி நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவதா ?
அல்லது வேறுவிதமான நடைமுறைகள் தொடர்பில் பரிசீலிப்பதா ? என்பது தொடர்பில் ஆராயப்படுமெனவும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆஸ்திரியா, பல்கேரியா, பெல்ஜியம், கம்போடியா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸிடொனியா,பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறிஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லித்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து,
-போலந்து, போர்த்துகல், ரோமானியா, சிலோவேனியா, சுவீடன், ஸ்பானியா, ஐக்கிய அரபு இராச்சியம், அவுஸ்ரேலியா, தென் கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸிலாந்து,
-மலேசியா, தாய்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள், இம்முறை ஊடாக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இலகுவாக இலங்கைக்கான சுற்றுலா விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க, ஆசியாவில் பல நாடுகள் on arrival visa முறையை அமுல்படுத்தியுள்ளன.
இதன் மூலம் அந்நிய வருமானத்தை அதிகரிக்க முடியும் என்பதுடன், பொருளாதார அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பாக அமையும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )