ஒன்றரை வயதுக் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்த தாய்! – ஓட்டமாவடியில் கொடூரம்
ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையின் விதைப்பைகள் இரண்டையும் துண்டித்தார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில், 38 வயதுடைய தாயொருவரைக் கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தை, தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கைதுசெய்யப்பட்ட தாய், அந்த வைத்தியசாலையின் மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், தனது இளைய குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது, மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தையின் இரு விதைப்பைகளையும் துண்டித்துத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை வீறிட்டு அழவே, அக்கம்பக்கத்தார் ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்து, வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். குழந்தையின் தாய், அவ்வப்போது மனநிலைப் பாதிப்புக்கு உள்ளாகுபவர் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.