திருக்கோவிலில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் உறவுகளின் நினைவேந்தல்!
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர்நீத்த மாணவர்கள் உட்பட ஏழு பேரின், 16ஆவது ஆண்டு நினைவேந்தல், திருக்கோவில் 02 சுப்பர்ஸ்டார் விளையாட்டுத் திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.
இப்படுகொலை நினைவேந்தல், அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, தாய்மார்கள், தங்களின் பிள்ளைகளின் உருவப்படங்களுக்கு மலர்மாலை அணிவித்து, அகல்விளக்கேற்றி கண்ணீரோடு அனுஷ்டித்தனர்.
அத்துடன், படுகொலை செய்யப்பட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரிநாயகம் சந்திரநேருவின் உருவப்படத்துக்கு, அவரது மனைவி, மலர்மாலை அணிவித்து தீபச் சுடர் ஏற்றினார்.
2002ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மாலை, சமாதான காலத்தில் காஞ்சிராம்குடா இராணுவ முகாமை நோக்கி இடம்பெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி, மாணவர்கள் உட்பட ஏழு பேர் மரணித்திருந்தனர்.