நாடாளுமன்றத்துக்கும் வெள்ள அபாயம்! – முன்னேற்பாடுகள் தீவிரம்; படையினரும் விரைவு

நாட்டில் பலபாகங்களிலும் அடைமழைபெய்துவரும் நிலையில், நாடாளுமன்ற வளாகமும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் அமைந்துள்ள தியவன்னா ஒயாவின் பகுதியில் நீர்மட்டம் உயர்வடைந்துவருகின்றது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் புகுந்துவிடும் என்ற அச்சத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி நாடாளுமன்ற நுழைவாயில் மற்றும் சுற்றுப்புறங்களில் படையினர் மணல் மூடைகளை அடுக்கியுள்ளனர். அவசர நிலைமைகளைச் சமாளிக்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தியவன்ன ஓயாவில் வெள்ளம் ஏற்பட்டு நீர்மட்டம் அதிகரித்ததால், நாடாளுமன்றத்துக்குள் 1992ஆம் ஆண்டும், 2010ஆம் ஆண்டும் வெள்ளம் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களு மற்றும் ஜின் கங்கைகளுடன், அத்தனுகலு ஓயாவை அண்டி வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினமும் கன மழை எதிர்ப்பார்க்கப்படுவதனால், குறித்த கங்கைகளில் நீர்மட்டம் அதிகரிப்பது தொடர்பில் அந்தப் பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக களனி, கொலன்னாவை, பியகமை, கடுவலை முதலான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
????????????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *