கச்சத்தீவு விவகாரம் – சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

கச்சத்தீவு விவகாரம் குறித்து தமிழக அரசு சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கச்சத்தீவானது பழைய இராமநாதபுரம் சாம்ராஜ்யத்தை ஆண்ட ராஜாவுக்கு சொந்தமானது என கூறப்பட்டது.

இதனை ஒப்புக்கொண்ட தமிழக நீதித்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அதனை திரும்பப் பெறுவதற்கு நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம் என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“10 வருடங்கள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்காமல் கதை பேசி வருகிறார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பில்தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

இதேவேளை, ”மக்களின் நலன் கருதியே இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதால் சமஸ்தானத்தின் மன்னர் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை” என சமஸ்தானத்தின் ராணியான லெட்சுமி நாச்சியார் தெரிவித்துள்ளார்.

“கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதால் மீனவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் அதனை இந்தியா மீளப்பெற விரும்பும் நிலையில் அது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்குத் தானும் தனது மகன் நாகேந்திர சேதுபதியும் உதவத் தயாராக இருப்பதாக” லெட்சுமி நாச்சியார் தெரிவித்தார்.

இதனிடையே, கச்சத்தீவை இந்தியா மீளப்பெற்றாலும் மீன பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என கச்சத்தீவில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோணியார் ஆலயத்தை நிர்மாணித்தவர்களது தலைமுறைகள் தெரிவிக்கின்றன.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கு காங்கிரஸும் திமுகவும் கூட்டுச் சேர்ந்ததாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டதையடுத்து இந்திய மக்களைவைத் தேர்தலுக்கான பிரச்சார தொனிப்பொருளாக கச்சத்தீவு விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *