நாம் இறந்த பிறகு நமது சமூக ஊடக கணக்குகள் என்ன ஆகும்?

“மேத்யூ இறந்துவிட்டார் என்பதே பலருக்குத் தெரியாது, இன்னும் அவரது பிறந்த நாளன்று, பலர் அவரது சமூக ஊடக பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர். அதைப் பார்ப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.”

ஹேலி ஸ்மித்தின் கணவர்தான் மேத்யூ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது 33வது வயதில் அவர் புற்றுநோயால் இறந்துவிட்டார். ஆனால், ஹேலிக்கு இன்னமும் மேத்யூவின் சமூக ஊடக பக்கங்களை என்ன செய்வதென்று தெரியாமல் அவற்றோடு போராடிக் கொண்டிருக்கிறார்.

“நான் மேத்யூவின் முகநூல் பக்கத்தை நினைவுப் பக்கமாக (memorial page) மாற்ற முயற்சி செய்தேன். ஆனால், அதற்கு அவரது இறப்பு சான்றிதழைப் பதிவேற்றச் சொல்லி முகநூல் கேட்பதாக” கூறுகிறார் பிரிட்டனை சேர்ந்த சமூக நல ஊழியரான ஹேலி.

அதையும்கூட 20 முறை செய்தும் முகநூல் அதை எடுத்துக் கொள்ளவில்லை. எதுவுமே மாறவில்லை. எனக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடர்புக் கொண்டு இந்த பிரச்னையைத் தீர்க்கும் அளவிற்கான தெம்பு இல்லை என்கிறார் அவர்.

  • நாம் இறந்த பிறகு நமது சமூக ஊடக கணக்குகள் என்ன ஆகும்?
நினைவுப் பக்கம் என்றால் என்ன?

அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியோடு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இவற்றைப் பயன்படுத்தும் ஒருவர் இறந்துவிட்டால் அவரது சமூக ஊடக பக்கம் என்ன ஆகும்?

உறவினர் அல்லது நண்பர் என யாராவது ஒருவர் இறந்தவர் குறித்த தகவல்களை சமூக ஊடக பக்கத்தில் அப்லோட் செய்யும் வரை அவரது சமூக ஊடக கணக்கு செயல்பாட்டில்தான் இருக்கும்.

இதற்காகவே சில சமூக ஊடக நிறுவனங்கள் இறந்தவரின் உறவினரோ அல்லது நண்பரோ அவரது இறப்பை அதிகாரபூர்வமாகப் பதிவேற்றம் செய்வதன் மூலம், குறிப்பிட்ட கணக்கைச் செயலிழக்கச் செய்யும் வழியைக் கொண்டுள்ளன. மற்ற நிறுவனங்கள் வேறு சில வழிகளையும் கொண்டுள்ளன.

உதாரணத்திற்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனம் இரண்டு வழிகளை வழங்குகிறது. அதன்படி இறந்தவரின் இறப்புச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்து அந்தக் கணக்கை நிரந்தரமாக அழித்துவிடலாம் அல்லது நினைவுப் பக்கம் என்று சொல்லக்கூடிய பக்கமாக மாற்றிக் கொள்ளலாம்.

நினைவுப்பக்கம் என்பது குறிப்பிட்ட கணக்கை முடக்கிவிட்டு, அந்த நபரின் நினைவுகள் மற்றும் போட்டோக்களை மற்றவர்கள் பகிரும் நினைவுப் பக்கமாக மாற்றிக்கொள்ளும் வழிமுறை.

இந்தப் பக்கத்தில் பயனரின் பெயருக்கு அருகில் “in memoriam” என்று சொல்லக்கூடிய குறியீடு காணப்படும். யாரும் இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தவோ அல்லது இயக்கவோ முடியாது.

ஆனால், ஏற்கெனவே இறப்பதற்கு முன் அந்தப் பயனர் தனது உறவினர் அல்லது நண்பரின் எண்ணை மாற்று எண்ணாகப் பதிவு செய்து வைத்திருந்தால் அவர் மட்டும் அந்தக் கணக்கை நிர்வகிக்க முடியும்.

இந்த வகை பக்கங்கள் ஃபேஸ்புக்கில் உள்ள எந்தவொரு நபருக்கும் நட்பு அழைப்புக்குப் பரிந்துரைக்கப்படாது. அதேபோல் இறந்தவரின் பிறந்தநாளும் அவரது நட்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு அப்டேட் செய்யப்படாது.

  • நாம் இறந்த பிறகு நமது சமூக ஊடக கணக்குகள் என்ன ஆகும்?
குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு கணக்கு செயலற்று இருந்தால், அதைச் செயலற்ற கணக்காக மாற்றும் வழிமுறைகள் கூகுளில் உள்ளது.

யூட்யூப், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் ஆகியவற்றின் தாய் நிறுவனமான கூகுளும் தனது பயனர்களுக்கு இப்படியான ஒரு தேர்வை வழங்குகிறது.

அதன்படி, குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு கணக்கு செயலற்று இருந்தால், அதைச் செயலற்ற கணக்காக மாற்றும் வழிமுறைகள் அதில் உள்ளன.

ஆனால் எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் அப்படி இறந்தவர்களின் நினைவுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளும் வசதிகள் எதுவும் இல்லை. அதில் ஒருவர் இறந்துவிட்டால் அல்லது அந்தக் கணக்கைப் பயன்படுத்த முடியாமல் போனால் அதைச் செயலிழக்க மட்டுமே செய்ய முடியும்.

“இங்கு பல அணுகுமுறைகள் உள்ளன. ஆனால், அனைத்து நிறுவனங்களும் இறந்தவரின் தனியுரிமைக்கே முன்னுரிமை அளிக்கின்றன” என்று கூறுகிறார் பிபிசி உலக சேவையின் தொழில்நுட்ப செய்தியாளர் ஜோ டைடி.

இதில் “இறந்தவரின் சமூக ஊடக பக்கத்தின் லாகின் விவரங்கள் எதுவும் பகிரப்படாது. மேலும் உங்களால் ஒரு சில படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அதுவும் சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற உத்தரவும்கூட தேவைப்படும்.”

மேலும் டிக்டாக் மட்டும் ஸ்நாப்சேட் போன்ற தளங்களில் இதுபோன்ற எந்த சலுகைகளும் இல்லை என்றும் கூறுகிறார் அவர்.

  • டிஜிட்டல் உயில்
நாம் இறந்த பிறகு நமது சமூக ஊடக கணக்குகள் என்ன ஆகும்?
“இறந்தவரின் போட்டோ உள்ளிட்ட தரவுகளை எடுத்து போலியான கணக்கு ஒன்றைத் தொடங்கி, அவர் இறந்துவிட்டார் என்று தெரியாத நண்பர்களிடம் பணம் பறித்தல் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.”

இறந்தவர்களுடைய சமூக ஊடக கணக்குகளில் உள்ள தரவுகள், படங்கள் மற்றும் இதர தகவல்கள் தவறான நபர்களிடம் கிடைத்தால் ஆபத்து என்று எச்சரிக்கிறார் சைபர் கிரைம் நிபுணரும், செர்பியாவின் உள்துறை அமைச்சகத்தின் உயர் தொழில்நுட்பக் குற்றங்களுக்கான துறையின் முன்னாள் தலைவருமான சாசா ஜிவனோவிக்.

இதன்மூலம் குறிப்பிட்ட சமூக ஊடக கணக்கில் இருந்து சில தரவுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் மற்றும் ஒட்டுமொத்த கணக்கையே கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ள முடியும்.

மேலும், “இறந்தவரின் போட்டோ உள்ளிட்ட தரவுகளை எடுத்து போலியான கணக்கு ஒன்றைத் தொடங்கி, அவர் இறந்துவிட்டார் என்று தெரியாத நண்பர்களிடம் பணம் பறித்தல் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது” என்கிறார் அவர்.

பிரிட்டனின் டிஜிட்டல் லெகசி அசோசியேஷனின் தலைவரான ஜேம்ஸ் நோரிஸ், சமூக ஊடகங்களில் நாம் என்ன மாதிரியான உள்ளடக்கங்களைப் பதிவேற்றுகிறோம் என்பது குறித்து சிந்திப்பது அவசியம் என்றும், எப்போது முடிகிறதோ அப்போது அவற்றை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது முக்கியம் என்பதையும் வலியுறுத்துகிறார்.

உதாரணமாக ஃபேஸ்புக்கை சுட்டிக்காட்டும் அவர், அதில் உங்களது ஒட்டுமொத்த போட்டோ மற்றும் தரவுகளை மொத்தமாக பதிவிறக்கம் செய்து, உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அதை அனுப்பி சேமித்து வைத்துக்கொள்ள முடியும் என்பதைக் குறிப்பிடுகிறார்.

  • நாம் இறந்த பிறகு நமது சமூக ஊடக கணக்குகள் என்ன ஆகும்?
ஒருவரது இறப்பிற்குப் பின் அவரது சமூக ஊடக கணக்குகளை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வது அவசியம் என்று கருதுகிறார் சாசா.

“எனக்கு ஒரு குணப்படுத்த முடியாத நோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறது. அதேநேரம் எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை வளர்ந்து என்னைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தேவையான ஒரு சேமிப்புப் பெட்டகத்தை என்னால் உருவாக்கி, அதில் எனக்குப் பிடித்த படங்களை ஃபேஸ்புக்கில் இருந்து பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ள முடியும். மறுபுறம் என் குழந்தை பார்க்க வேண்டாம் என்று நான் நினைக்கும் எனது தனிப்பட்ட குறுஞ்செய்திகளை என்னால் அழித்துவிட முடியும்,” என்கிறார் அவர்.

ஒருவரது இறப்பிற்குப் பின் அவரது சமூக ஊடக கணக்குகளை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வது அவசியம் என்று கருதுகிறார் சாசா.

மேலும் பலரையும், அவர்கள் இறந்ததற்குப் பின்பு அவர்களது டிஜிட்டல் தரவுகளை யார் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான உயிலை தயார் செய்யுமாறு ஊக்குவிக்கிறார் இவர்.

“இறுதியாகப் பார்த்தால், இந்த சமூக வலைப்பின்னல் அமைப்பு மொத்தமும் வணிகம் சார்ந்தது மட்டுமே. இந்த தளங்கள் எதுவும் ‘நமது டிஜிட்டல் மரபின் பாதுகாவலர்கள் அல்ல” என்று கூறும் அவர், “நாம் மட்டுமே அதன் பாதுகாவலர்கள்” என்கிறார்.

இருப்பினும், இந்த சமூக ஊடகங்கள் ஒரு நபரை இழந்த உறவினர்களுக்கு இதற்கான செயல்முறையை எளிதாக்கித் தரும் என நினைக்கிறார் அவர்.

“ஆனால், குறிப்பிட்ட தளத்தில் என்ன மாதிரியான சேவைகள் வழங்கப்படுகின்றன, எந்த மாதிரியான பயன்பாடுகள் இருக்கின்றன என்பது குறித்த விழிப்புணர்வை வழங்குவது முக்கியம். காரணம் அனைவருக்கும் இதுகுறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,” என்கிறார் அவர்.

  • டிஜிட்டல் மரபு என்பது வெறும் சமூக ஊடகம் சார்ந்தது மட்டுமல்ல
நாம் இறந்த பிறகு நமது சமூக ஊடக கணக்குகள் என்ன ஆகும்?
“இன்றைய டிஜிட்டல் உலகில் படங்கள், வீடியோக்கள் என்பதைத் தாண்டி, நிதி மேலாண்மை, இசை, ஆன்லைன் கேமிங் என அனைத்தையும் நாம் டிஜிட்டல் முறையில்தான் கையாள்கிறோம்.”

“டிஜிட்டல் மரபு என்பது ஒரு பெரிய தலைப்பு,” என்று எச்சரிக்கிறார் மேரி கியூரி அமைப்பின் ஆராய்ச்சி செவிலியர் சாரா அடன்லி. பிரிட்டனை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான மேரி கியூரி , குணப்படுத்தப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும், அவர்களின் அன்புக்குரிய உறவினர்களுக்கும் ஆதரவை வழங்கி வருகிறது.

மக்கள் தங்களது சமூக ஊடகங்கள் மட்டுமின்றி, தாங்கள் டிஜிட்டல் வழியில் பயன்படுத்தக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும், அவற்றைத் தங்களது இறப்புக்குப் பின் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டுமென வலியுறுத்துகிறார் அவர்.

“இன்றைய டிஜிட்டல் உலகில் படங்கள், வீடியோக்கள் என்பதைத் தாண்டி, நிதி மேலாண்மை, இசை, ஆன்லைன் கேமிங் என அனைத்தையும் நாம் டிஜிட்டல் முறையில்தான் கையாள்கிறோம்.”

“எனவே , டிஜிட்டல் மரபு என்பது வெறும் சமூக ஊடகங்கள் குறித்தது மட்டுமல்ல என்றே நான் நினைக்கிறேன்.”

நாம் எதையெல்லாம் டிஜிட்டல் வழியில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம், அவற்றை என்ன செய்ய வேண்டும் என்று நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்ற கருத்தோடு அவர் ஒத்துப்போகிறார்.

“ நமது சமூக ஊடக பக்கத்தை இன்னொருவர் பயன்படுத்துவதையும் அதை நமது இறப்பிற்குப் பிறகு நினைவுப் பக்கமாக மாற்றுவதையும் நாம் விரும்புகிறோமா? நமது நினைவுகளான டிஜிட்டல் போட்டோக்களை நமது குழந்தைகளுக்குக் கடத்த விரும்புகிறோமா? அல்லது அவற்றை வழக்கமாக மக்கள் செய்வதைப் போல அச்செடுத்து போட்டோ ஆல்பமாக, நாம் இறந்ததற்குப் பிறகு மற்றொருவரிடம் கொடுப்பதை விரும்புகிறோமா? டிஜிட்டல் மரபு என்பது நிச்சயம் நாம் சிந்திக்க மற்றும் விவாதிக்க வேண்டிய விஷயம்.”

ஆனால், ஹேலி மற்றும் மேத்யூவுக்கு, இது ஒன்றும் எளிமையான விஷயம் அல்ல. “மேத்யூ இறக்கும் தருவாயில் நான் இதுகுறித்துப் பேசவே இல்லை, ஏனெனில், அவருக்கு இறப்பது குறித்துப் பேசுவதில் விருப்பமில்லை” என்று கூறினார் ஹேலி.

“தன்னால் முடிந்த அளவுக்கு அவர் வாழவே விரும்பினார், ஆனால் அவரது உடல் மிகவும் மோசமடைந்தது. அவர் அவராகவே இல்லை. அதனால், அவரால் எனது கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியவில்லை.”

  • நாம் இறந்த பிறகு நமது சமூக ஊடக கணக்குகள் என்ன ஆகும்?
நாம் எதையெல்லாம் டிஜிட்டல் வழியில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம், அவற்றை என்ன செய்ய வேண்டும் என்று நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும் என்ற கருத்தோடு ஒத்துப்போகிறார் சாரா.

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஓராண்டே முடிந்திருந்த நிலையில் 2016 ஜூலை மாதம் மேத்யூவுக்கு ஸ்டேஜ் 4 கிளியோபிளாஸ்டோமா இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அவருக்கு 28 வயதே ஆகியிருந்தது.

மேத்யூவுக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக உயிர் காக்கும் அறுவை சிகிச்சை தேவை என்றும் கூறிய மருத்துவர்கள், “உங்களது வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறப் போகிறது.” என்று கூறினார்கள்.

அதே நேரம் அறுவை சிகிச்சையும், அதைத் தொடர்ந்து கீமோதெரப்பியும் நன்றாவே நடந்தது. ஆனால் மீண்டும் கட்டி வளரத் தொடங்கியது. இதனால் மேத்யூ இன்னும் ஓராண்டு மட்டுமே உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

“எங்களது வீட்டு பில்களில் தொடங்கி, என்னிடம் இருந்த அனைத்திலும் அவரது பெயரே இருந்தது” என்று கூறினார் ஹேலி. “எனவே நான் எல்லாவற்றையும் மீண்டும் மாற்ற வேண்டியிருந்தது. மேலும் அவற்றை மாற்றுவது மிகக் கடிமானதாக இருந்தது. இது அனைத்தையும் செய்ய எனக்கு 18 மாதங்கள் எடுத்துக்கொண்டது.”

ஹேலிக்கு மேத்யூவின் முகநூல் பக்கத்தை அவருக்கான நினைவுப் பக்கமாக மாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இந்த நேரத்தில் அவரால் இந்த டிஜிட்டல் பிரச்னையோடு போராட முடியாது.

“தொடர்ந்து உங்கள் அன்புக்குரியவரின் இறப்புச் சான்றிதழைப் பார்த்துக்கொண்டே இருப்பது மிகவும் வலி மிகுந்தது. அதனால்தான் நான் இதைச் செய்யாமல் தவிர்த்து வருகிறேன்.”

“இது உண்மையில் மிகவும் சிக்கலான செயல்முறை என்று நான் நினைக்கிறேன், ஏற்கெனவே துயரத்தில் இருக்கும் மக்களுக்கு நிறுவனங்கள் இந்தச் செயல்முறையை எளிதாக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *