தினமும் ஒரு சூரியனை விழுங்கும் ‘பிரபஞ்சத்தின் நரகத்தை’ கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

நரகம் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை விவரிக்க முடியாத நிலை இருந்தது. ஒருவேளை அது குறித்து சொல்ல நரகத்திலிருந்து யாரும் திரும்பி வர முடியாததால் கூட இருக்கலாம்.

நரகம் என்பது மிகவும் மோசமான, நெருப்பால் சூழப்பட்ட, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு இடமாக தான் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக ஒரு பெரிய வானியல் ஆய்வின் மூலமாக, பிரபஞ்சத்தின் நரகம் எது என்பதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது.

நேச்சர் ஆஸ்ட்ரோனமி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய கட்டுரையில், விண்வெளித் துகள்கள் மற்றும் பிரகாசமான வாயுக்களின் அடுக்குகளால் சூழப்பட்ட ஒரு கருந்துளை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

J0529-4351 என்று பெயரிடப்பட்ட இந்த கருந்துளை, பிரபஞ்சத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகவும் பிரகாசமான பொருளாகும்.

  • சூரியனை விழுங்கும் கருந்துளையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

மிகப்பெரிய கருந்துளைகள்

பிரபஞ்சம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் லட்சக்கணக்கான பிரம்மாண்ட கருந்துளைகளை வானியலாளர்கள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இவை பொதுவாக விண்மீன் திரள்களின் மையங்களில் காணப்படும். மேலும், பலநூறு கோடி சூரியன்களை விட அளவில் மிகப்பெரியதாக இருக்கும் இந்த கருந்துளைகள்.

கருந்துளைகள் வேகமாக வளர, நட்சத்திரங்கள் மற்றும் வாயு மேகங்களை அவற்றின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியே இழுத்து, திரட்டல் வட்டின் (Accretion disk) சுற்றுப்பாதை வளையத்துக்குள் வருமாறு ஈர்க்கின்றன.

அந்த வளையத்தில் சிக்கிக்கொண்டால், மிகக் குறைவான பொருட்களே வெளியேறுகின்றன. கருந்துளையால் விழுங்கப்படும் பொருட்களை இந்த வட்டு தக்க வைத்துக் கொள்கிறது. அதில் உள்ள பொருட்கள் ஒன்றோடொன்று உராய்வதால் வட்டு மேலும் வெப்பமடைகிறது.

போதுமான பொருட்கள் உள்ளே ஈர்க்கப்பட்டால், வெப்பத்தால் உண்டாகும் பளபளப்பு மிகவும் பிரகாசமாகி, ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களையே அந்த பிரகாசம் மிஞ்சுகிறது. இதனால் தான் பூமியிலிருந்தும் 1200 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளை வளர்வதை காண முடிகிறது.

  • சூரியனை விழுங்கும் கருந்துளையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

பிரபஞ்சத்தில் அதிவேகமாக வளரும் கருந்துளை

J0529-4351 கருந்துளையின் திரட்டல் வட்டு நமது சூரியனை விட 50000 கோடி மடங்கு அதிகப் பிரகாசமான ஒளியை வெளியிடுகிறது. கருந்துளை ஒவ்வொரு நாளும் ஒரு சூரியனை விழுங்கினால் மட்டுமே இவ்வளவு வியக்கத்தக்க அளவு ஆற்றலை வெளியிட முடியும்.

எனவே இந்த கருந்துளை ஏற்கெனவே ஒரு மிகப்பெரிய அளவு நிறையைக் கொண்டிருக்க வேண்டும். J0529-4351 என்பது நமது சூரியனின் நிறையை விட 1500 முதல் 2000 கோடி மடங்கு அதிகமாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.

ஆனால் இந்த கருந்துளைகளைப் பார்த்து பயப்பட தேவையில்லை. இந்த அசுரனின் ஒளி பூமியை வந்தடைய 1200 கோடி ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, இதன் அர்த்தம் நீண்ட காலத்திற்கு முன்பே அதன் வளர்ச்சி நின்றுவிட்டது.

அருகிலுள்ள பிரபஞ்சத்தில், இன்றைய மிகப்பெரிய கருந்துளைகள் பெரும்பாலும் தூங்கும் அசுரர்களாக இருப்பதைக் காண முடிகிறது.

  • கட்டுப்பாட்டை இழக்கும் கருந்துளைகள்

சுற்றியிருக்கும் அனைத்தையும் கண்டபடி ஈர்த்து, விழுங்கி கருந்துளைகள் வளர்ந்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. ஏனெனில் விண்மீன் திரள்களில் மிதக்கும் வாயுக்கள் பெரும்பாலும் நட்சத்திரங்களாக மாறிவிட்டன.

பலநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, நட்சத்திரங்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட வடிவங்களில் அமைத்துக் கொண்டன. பெரும்பாலும் விண்மீன் திரள்களின் மையங்களில் உறங்கும் கருந்துளைகளைச் சுற்றி நீண்ட, ஒழுங்கான சுற்றுப்பாதையில் இந்த நட்சத்திரங்கள் உள்ளன.

ஆனால் ஒரு நட்சத்திரம் திடீரென கருந்துளையை நோக்கிச் சென்றாலும், அது பெரும்பாலும் ‘ஸ்லிங்ஷாட் விளைவு’ (slingshot effect) மூலம் மீண்டும் வேறு திசையில் பாய்ந்து தப்பிக்கும்.

விண்வெளி ஆய்வுகள் வியாழனிடமிருந்து ஊக்கத்தைப் பெற ‘ஸ்லிங்ஷாட் விளைவு’ எனப்படும் இந்த யுக்திகளைப் பயன்படுத்துகின்றன, இதனால் சூரிய குடும்பத்தின் கடினமான பகுதிகளை அடையலாம்.

ஆனால் விண்வெளியில் அதிகமான பொருட்கள் இருந்தால், எதிர் திசையில் வரும் ஒன்றை அவை எதிர்கொண்டால், இரண்டும் துகள் மேகத்தில் மோதி வெடித்து, உடனே வியாழனின் வளிமண்டலத்தில் விழுந்து விடும்.

இந்த கோளாறு காரணமாக பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் நட்சத்திரங்களுக்கு இடையே இந்த வகையான மோதல்கள் நடப்பது வழக்கமாக இருந்தது, இந்த மோதலால் கருந்துளைகள் தான் முதலில் பயனடைந்தன.

  • சூரியனை விழுங்கும் கருந்துளையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

திரட்டல் வட்டு: விண்வெளி வீரர்களுக்கு தடைசெய்யப்பட்ட பகுதி

உள்ளே சென்றால் திரும்பி வர முடியாத ஒரு இடத்திற்கான நுழைவாயிலாக திரட்டல் வட்டுகள் இருக்கின்றன. ராட்சத புயல் அணுக்கள் போல தெரியும் இந்த திரட்டல் வட்டுகளின் மேகங்கள், பல்லாயிரக் கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடையும் போது, ஒளிரும் தன்மை கொண்டவையாக மாறும்.

துளையை நெருங்கும்போது இந்த மேகங்கள் மிகவும் வேகமாக நகரும். இந்த வேகம் ஒரு வினாடிக்கு 100,000 கிலோமீட்டர் வரை இருக்கும். ஒரு மணி நேரத்தில் பூமி நகரும் தொலைவை இந்த மேகம் ஒரு நொடியில் கடந்து விடும்.

J0529-4351 கருந்துளையைச் சுற்றியுள்ள திரட்டல் வட்டு ஏழு ஒளி ஆண்டுகள் கடந்து இருக்கிறது. இது சூரியனுக்கும் அதன் அருகில் உள்ள ஆல்பா சென்டாரிக்கும் இடையே உள்ள தூரத்தை விட ஒன்றரை மடங்கு அதிகம்.

  • இதுவரை கண்டுபிடிக்கப்படாதது ஏன்?

இது பிரபஞ்சத்திலே பிரகாசமான பொருள் என்றால், அது ஏன் இதுவரை கண்டறியப்படவில்லை? காரணம், பிரபஞ்சம் முழுவதும் ஒளிரும் கருந்துளைகளால் நிறைந்துள்ளது.

உலகின் தொலைநோக்கிகள் பல தகவல்களை தெரியப்படுத்துகின்றன, அதை சரிபார்ப்பதற்கு வானியலாளர்கள் அதிநவீன இயந்திர கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இயல்பாகவே இயந்திர வழி கற்றல் முறை, முன்பு கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு மீண்டும் கண்டறிய முனைகிறது.

கருந்துளைகளைச் சுற்றியுள்ள சாதாரணமான திரட்டல் வட்டுகளை கண்டறிவதில் இந்த கருவிகள் சிறப்பாக இருக்கின்றன (இதுவரை சுமார் பத்து லட்சம் வட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது), ஆனால் J0529-4351 போன்ற கருந்துளையை கண்டறிவதில் இவை அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது.

2015ஆம் ஆண்டில், சீனக் குழு ஒன்று வேகமாக வளர்ந்து வந்த கருந்துளை ஒன்றை அல்காரிதம் மூலம் கண்டறிந்தது, ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது என அல்காரிதம் கருதியதால், கிட்டத்தட்ட அதை தவறவிட்டது சீனக் குழு.

இந்த வேலையில் மிகவும் தீவிரமான பொருட்கள், பிரகாசமாக ஒளிரும் மற்றும் வேகமாக வளரும் கருந்துளைகள் ஆகியவற்றைக் கண்டறிவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது, எனவே இயந்திர வழி கற்றல் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தோம், ஏனெனில் அவை உள்ளிடப்பட்ட தரவுகள் மூலமாக வழிநடத்தப்படுபவை.

அதற்குப் பதிலாக, புதிய தரவைத் தேடுவதற்குப் பழமையான முறைகளையே பயன்படுத்தி சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளோம்.

எங்கள் பணியானது, பெரிய அளவிலான வானியல் வசதிகளை கொண்ட பல ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியுடன் இயங்கும் ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வகத்துடனான ஆஸ்திரேலியாவின் பத்து வருட கூட்டாண்மையைச் சார்ந்துள்ளது.

*கிறிஸ்டியன் வுல்ஃப் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் வானியற்பியல் இணை பேராசிரியராக உள்ளார்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *