ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு
ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தனி வழிசெல்லும் சாத்தியம் உருவாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அண்மைக்காலமாக தகவல்கள் வௌியாகி இருந்தன.
இந்நிலையில் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று நடைபெற்ற போது ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்புச் செய்திருந்தனர்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் ராஜித சேனாரத்ன, சம்பிக ரணவக, சரத் பொன்சேகா, குமார வெல்கம, இஷாக் ரஹ்மான் ஆகியோர் நாடாளுமன்ற அரங்கில் தங்கியிருந்து ஜனாதிபதியின் உரையை முழுமையாக செவிமடுத்திருந்தனர்.
குறித்த ஐந்து பேருடன் இன்னும் சிலரும் மிக விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வௌியேறக் கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.