கையடக்கதொலைபேசியை மூச்சுக்காற்று மூலம் Unlock செய்யும் முறை கண்டுபிடிப்பு!

 

ஐஐடி மெட்ராஸ் விஞ்ஞானிகள் மனிதர்களின் முகம், கருவிழி, கைரேகையைப் போலவே மூச்சுக்காற்றை பயோமெட்ரிக்காக பயன்படுத்த முடியும் எனக் கூறுகின்றனர். இதனால் மருத்துவத்துறை, தொழில்நுட்பத் துறை போன்ற பல துறைகளில் பல புதுமையான விஷயங்களை செய்ய முடியும் என்கின்றனர்.

மெட்ராஸ் ஐஐடியில் உள்ள அப்ளைட் மெக்கானிக்ஸ் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியர் மகேஷ் தலைமையிலான ஆய்வுக் குழு, மனித மூச்சுக்காற்றை பயன்படுத்தி ஒரு தனித்துவமான பயோமெட்ரிக் அமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இப்போது இதில் பல முன்னேற்றங்களை அவர்கள் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இது முழுமை பெற்று பயன்பாட்டிற்கு வரும்போது மருத்துவத் துறையிலும், செல்போன் துறையிலும் மனித சுவாசத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, உள்ளே நுழையும் பயோமெட்ரிக் அமைப்பை உருவாக்க அதிகம் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்ய கைரேகை கருவிழியை பயன்படுத்துவது போல மனிதர்களின் மூச்சுக்காற்றையும் பயன்படுத்தலாம். அத்துடன் ஒரு தனிப்பட்ட நபருக்கான அடையாளச் சான்றுகளையும் இந்த தொழில்நுட்பத்தால் உருவாக்க முடியும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் நுரையீரலில் இருந்து வெளியேறும் மூச்சுக்காற்றில் உள்ள ஏற்ற இறக்கங்கள் வெவ்வேறு விதங்களில் இருக்கும். அதில் இருக்கும் ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட அடையாளங்களை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஒரு நபர் வெளியேற்றும் மூச்சுக்காற்று முதலில் அல்காரதமாக மாற்றப்பட்டு, பின்னர் அவருக்கான தனித்துவமான அடையாளமாக மாற்றப்படும். இதற்காக 94 நபர்களின் சுவாச மாதிரி தரவுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். இதில் இந்த பயோமெட்ரிக் அமைப்பு 97 சதவீத துல்லியத்தன்மையுடன் அல்காரிதம்களை உருவாக்கி சிறப்பாக செயல்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *