காஸாவில் போர் சூழ்நிலையிலும் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது
காஸாவில் போர் ஆரம்பமாகி மூன்று மாதங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் போர் சூழலிலும் அங்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான நிதியமான யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
காஸா எல்லைப்பகுதிக்கு அண்மையில் சென்றுவந்த அந்த நிறுவனப் பேச்சாளர் இதனை கூறியுள்ளார்.
உயிர் போகும் அளவுக்கு ரத்தம் கசிகின்ற நிலையில் காணப்பட்ட தாய்மார்கள், ஆறு கர்ப்பிணிப் பெண்களின் சடலங்களுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை வெளியில் எடுக்க முயற்சித்த தாதி போன்ற காட்சிகளை தான் நேரில் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதல் நடத்தியதை அடுத்து போர் ஆரம்பமானதுடன் அன்றில் இருந்து இதுவரை சுமார் 20 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
காஸாவில் போர் சூழ்நிலையிலும் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது என யுனிசெஃப் பேச்சாளர் கூறியுள்ளார்.
தாய்மை அடைவது கொண்டாடப்பட வேண்டிய ஒரு தருணம். எனினும் நரகத்திற்குள் இன்னுமொரு குழந்தையை அழைத்து வரும் இடமாக காஸா காணப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், காஸாவில் நடக்கும் போரை நிறுத்த சர்வதேச ரீதியான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.