புறப்படும் போது விமானத்தின் கதவை திறந்து கீழே குதித்த பயணி
கனடாவில் விமானம் கிளம்பும் நேரத்தில் கதவை திறந்து பயணி கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் ‛ ஏர் கனடா’விற்கு சொந்தமான விமானம் ஒன்று துபாய்க்கு புறப்பட தயாராக இருந்தது.
அப்போது பயணிகள் அனைவரும் தங்களது விமான இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஆனால், ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார்.
அவர், யாரும் எதிர்பாராத நிலையில் விமானம் கிளம்பும் நேரத்தில் திடீரென கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இதனால் சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சுமார் 20 அடி உயரத்தில் இருந்து பயணி கீழே குதித்ததில் பலத்த காயம் அடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த விமான ஊழியர்கள் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து பயணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் எதற்காக விமானத்தில் இருந்து கீழே குதித்தார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த நபர் குறித்த விவரங்களை பொலிஸார் வெளியிடாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டாரா என்ற தகவலும் வெளிவரவில்லை. இதனால், விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக கிளம்பி சென்றது.