அமெரிக்க ஜனாதிபதிக்கு பின்லேடன் மருமகள் ஆதரவு!
நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒசாமா பின்லேடனின் மருமகள் ஆதரவளித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.
தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் நூர் பின் லேடின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது
“ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் செப்ரெம்பர் 11 தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடும்.
ஒபாமா / பிடன் ஆட்சி நிர்வாகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கம் பெருகியது, அவர்கள் ஐரோப்பாவிற்கு வர வழிவகுத்தது. பயங்கரவாதிகளை வேரோடு ஒழிப்பதில் ட்ரம்ப் முன்மாதிரியாக திகழ்கிறார். வெளிநாட்டு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவையும் எங்களையும் ட்ரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார்.
2015-இல் அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து நான் ட்ரம்ப்பின் ஆதரவாளராக இருந்தேன். நான் அந்த மனிதரை தூரத்திலிருந்தே பார்த்தேன். அவரின் உறுதியான தீர்மானங்களை பாராட்டுகிறேன். அவர் மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்திற்கும் இன்றியமையாதது.
கடந்த 19 ஆண்டுகளில் ஐரோப்பாவில் நடந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அவை எங்களை முழுவதுமாக அசைத்துவிட்டன’’ என்றார் நூர் பின் லேடின்.
இதேவேளை தான் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தாலும் இதயத்தில் தான் ஒரு அமெரிக்கராக நினைத்து வாழ்வதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.