இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
காங்கேசன்துறை நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மீண்டும் ஆரம்பிக்கும் இந்த சேவையில், இறுதியாக சேவையில் ஈடுபட்ட செரியாபானி கப்பல் ஈடுபடாது எனவும் சிவகங்கை என்ற கப்பலே அந்த சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கப்பலில் 150 பயணிகள் பயணிக்கமுடியும் என தெரிவித்த அவர் ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செல்லமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சேவையில் ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர், அதாவது 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய், இலங்கை ரூபாவாக 26 ஆயிரம் அறவிடப்படவுள்ளது.
இந்த பயணசேவைக்கான பயணச்சீட்டுக்கான முன்பதிவுகள் விரைவில் மேற்கொள்ளபடவுள்ளன.
அத்துடன் வாரத்தில் 6 நாட்கள் இந்த கப்பல் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், அரச வரிகளையும் இதர கட்டணங்களையும் குறைப்பதன் மூலம் இந்தப் பயணச்சீட்டின் விலையை மேலும் குறைப்பது குறித்து இந்திய, இலங்கை அரசுகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணத்தை 57.50 அமெரிக்க டொலர் அதாவது சுமார் 18,500 ரூபா அளவுக்குக் குறைவுக்கவுள்ளோம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.