கனடா செல்வதற்காக மட்டுமே பெண்களை ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்யும் ஆண்கள்
இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வ ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திடப்பட்டுள்ளது. ( ஒப்பந்தத்தின் நகல் பிபிசியிடம் உள்ளது)
இந்த விஷயத்தில், கனடா செல்வதற்காக அந்த பெண் 12ம் வகுப்பு முடித்த பிறகு IELTS தேர்வில் தேர்ச்சி பெற்று கனடாவுக்கு படிக்க செல்ல வேண்டும். அதற்கான மொத்த செலவையும் மணமகன் பார்த்து கொள்வார். இதற்கு கைமாறாக, அந்த பெண் மணமகனை கணவன் விசாவில் கனடாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
கனடா சென்றபிறகு அந்த பெண் ஏமாற்றி விட கூடாது என்பதற்காக பெண்ணின் பெற்றோர் கொடுத்த நகைகளை அந்த மணமகனே தன்னிடம் வைத்திருந்தார்.
உறவினர்கள் வருகையோடு திருமணம் நடைபெற்றது. சட்டபூர்வமாக பதிவும் செய்யப்பட்டது.
ஆனால், அந்த பெண்ணை பெற்றோர்கள் மணமகன் வீட்டிற்கு அனுப்பவில்லை. காரணம் அவர்கள் பார்வையில் அது கனடாவுக்கு செல்வதற்கான ஒப்பந்தம் தானே தவிர, நிஜமான திருமணம் கிடையாது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி அந்த பெண் முன்னதாகவே கனடா சென்று விட்டதால் தற்போது இந்த வழக்கு காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் வரை வந்துவிட்டது.
சமீபத்தில், ஒப்பந்த திருமணத்தில் மோசடி செய்ததாக கூறி கபுர்த்தலாவை சேர்ந்த மணமகனின் குடும்பத்தார், மணமகள் மற்றும் அவரது பெற்றோர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். இதில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல் வழக்கில் புகார்தாரர் பஞ்சாப் கபுர்த்தலாவாசியான பல்ஜித் ஜக்கியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகாரின்படி, அவரது பெற்றோர்கள் மோகாவை சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபரோடு அறிமுகமாகியுள்ளனர். இவர்களிடம் கவிதா தனது மகள் ஸ்வாதியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு பிறகு ஜக்கியின் இளைய தம்பி சவுரப்புக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்த பெண்ணை ஒப்பந்த திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையில் 9 வயது வித்தியாசம் இருந்துள்ளது.
ஒப்பந்தத்தின்படி, திருமண செலவு மற்றும் ஸ்வாதியின் ஒட்டுமொத்த படிப்பு செலவையும் பல்ஜித் ஜக்கியின் குடும்பம் பார்த்து கொள்ளும். அதற்கு கைமாறாக ஸ்வாதி கனடா சென்று தனது கணவர் சவுரபை அங்கு அழைத்து கொள்ள வேண்டும்.
ஸ்வாதி மற்றும் சவுரப் 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். முதல் தகவல் அறிக்கையின்படி, திருமண செலவுகள் அனைத்தும் மணமகனின் குடும்பத்தால் செய்யப்பட்டுள்ளது. 2019 செப்டம்பர் மாதம் ஸ்வாதிக்கு கனடா விசா கிடைத்து அவரும் அங்கு சென்று விட்டார்.
மணமகன் குடும்பத்தின் தகவல்படி, இதற்காக அவர்கள் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர்.
கனடா சென்ற மூன்று மாதங்கள் கழித்து ஸ்வாதி தனது கணவர் சவுரபையும் அங்கு அழைத்து கொள்வதாக ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டுள்ளார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதை செய்யவில்லை, இந்த சமயத்தில் சவுரபும் இந்தியாவில் இறந்துவிட்டார்.
அதற்கு பிறகு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சவுரபின் மூத்த சகோதரர் பல்ஜித்தை திருமணம் செய்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார் ஸ்வாதி. இந்நிலையில் அவர்கள் இருவருக்குமிடையில் 13 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்துள்ளது.
ஜக்கியின் தகவல்படி, இந்த திருமணம் எந்த அழுத்தமும் இல்லாமல் நடந்துள்ளது. அனைத்து திருமண செலவுகளும் மீண்டும் ஜக்கியின் குடும்பத்தால் செய்யப்பட்டுள்ளது. 20 நாட்கள் இந்தியாவில் தங்கி விட்டு ஜக்கியை கனடாவுக்கு அழைத்து செல்வதாக உறுதியளித்துவிட்டு மீண்டும் கனடா சென்றுள்ளார் ஸ்வாதி.
ஆனால், அதற்கு பிறகு ஸ்வாதி தனது மொபைல் அழைப்புகளையும் ஏற்கவில்லை , அவரையும் கனடா அழைத்து செல்லவில்லை என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார் பல்ஜித். மேலும், ஸ்வாதி மற்றும் அவரது தாய் கவிதா தங்களை 45 லட்சம் ஏமாற்றி விட்டதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார் அவர்.
கனடா சென்றுள்ள ஸ்வாதி மற்றும் அவரது தாய் கவிதாவிடமும் இதுகுறித்து பேசியது பிபிசி. இதற்கு பதிலளித்த ஸ்வாதி பல்ஜித் ஜக்கி குற்றம்சாட்டியுள்ள அனைத்து புகார்களும் அடிப்படையற்றவை என்று கூறியுள்ளார்.
“இதில் எந்த திருமண ஒப்பந்தமும் போடப்படவில்லை. நடந்து உண்மையான திருமணம்” என்று கூறியுள்ளார் அவர்.
விசா மற்றும் கல்விக்கான செலவு மணமகனின் குடும்பத்தால் தான் செலுத்தப்பட்டது என்று ஒப்புக்கொள்ளும் ஸ்வாதி, இருமுறை சவுரபை கனடா அழைத்து கொள்ள விண்ணப்பித்து, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
அதற்கு பிறகு சவுரப் இறந்து விட்டார். பிறகு மார்ச் 2023ம் ஆண்டு ஸ்வாதி பரஸ்பர உடன்பாட்டோடு சவுரபின் மூத்த சகோதர் பல்ஜித் ஜக்கியை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் திருமணம் முடித்து மீண்டும் ஸ்வாதி கனடா சென்ற பிறகு தொடர்ந்து அவரை மொபைலில் அழைத்து பல்ஜித் துன்புறுத்தி வந்ததாகவும், அதனால் அவர்களது உறவு மோசமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் ஸ்வாதி. அதே போல் பல்ஜித் கனடா செல்வதற்கான விசாவை தான் விண்ணப்பிக்கவில்லை என்பதையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.
மறுபுறம், ஸ்வாதி 2023 ஜூனிலிருந்தே தன்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும், அவரது தாயும் இந்த விஷயத்தில் தனக்கு எந்த வித ஆதரவும் வழங்கவில்லை என்றும் கூறுகிறார் பல்ஜித்.
ஸ்வாதியின் தாயும், பல்ஜித் மற்றும் ஸ்வாதிக்கு இடையில் ஒரு சில விஷயங்களில் போனிலேயே சண்டை நடந்தது. அதற்கு பிறகே இருவரின் உறவும் மோசமடைந்தாக கூறுகிறார்.
வெளிநாடு செல்வதற்காக, அதுவும் குறிப்பாக கனடா செல்வதற்காக ஒப்பந்த திருமணம் செய்து கொள்ளும் ட்ரெண்ட் பஞ்சாபில் சில காலமாக நிலவி வருகிறது.
இது போன்ற சம்பவங்களில், பெண் IELTS தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு, கனடாவில் அவரது படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளும் ஆணை மணந்து கொள்கிறார்.
பிறகு, அவர் கனடாவை அடைந்தவுடன், அந்த ஆணையும் அவர் கனடாவுக்கு அழைத்து கொள்ள வேண்டும். வேறு முறையில் சொல்ல வேண்டுமானால் ஆணுக்கு கனடாவுக்கு செல்வதற்கான டிக்கெட் போன்றது இந்த திருமணம்.
2021 ஆம் ஆண்டு, இது போன்ற ஒரு வழக்கில் பர்னாலா மாவட்டத்தில் உள்ள கோதே கோபிந்த்புரா கிராமத்தைச் சேர்ந்த லவ்ப்ரீத் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட போது இந்த நிகழ்வு தலைப்புச் செய்தியானது. இதிலும் லவ்ப்ரீத் சிங் ஐஇஎல்டிஎஸ் தேர்ச்சி பெற்ற பெண்ணான பியாந்த் கவுரை திருமணம் செய்து கொண்டு அவர் வெளிநாடு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் செய்துள்ளார்.
அந்த பெண் கனடா சென்ற பிறகு, லவ்ப்ரீத் சிங்குடன் மொபைலில் பேசி வந்துள்ளார். ஆனால் ஒருநாள் லவ்ப்ரீத் சிங் தற்கொலை செய்து கொண்டார்.
லவ்ப்ரீத் சிங்கின் இந்த தற்கொலைக்கு பியாந்த் கவுரே காரணம் என்று அவரின் குடும்பத்தார் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இது நடந்த சமயத்தில் இதே போல் பாதிக்கப்பட்ட பல ஆண்களும் முன்வந்ததாகவும், ஆனால் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை மக்களின் மூளைக்குள் அதிகம் ஏறிக் கிடப்பதால் தற்போது யாரும் முன்வராமல் இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார் லவ்ப்ரீத் சிங்கின் மாமா ஹர்விந்தர் சிங்.
பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியான கியான் சிங், பஞ்சாப் முழுவதுமே ஐஇஎல்டிஎஸ் திருமணத்தின் போக்கு காணப்படுகிறது என்கிறார்.
“அதற்கு காரணம் பஞ்சாபில் நிலவும் வேலைவாய்ப்பின்மையும், கனடா செல்லும் ஆசையும் தான். குறிப்பிட்ட பெண் கனடாவை அடைந்ததும், ஆண் மற்றும் பெண்ணின் பார்வையில் உள்ள வித்தியாசங்களால் விஷயங்கள் சிக்கலாகி விடுவதாக ” கூறுகிறார் அவர்.
“இங்கு அதிகம் நடக்கும் ஐஇஎல்டிஎஸ் திருமணங்கள் பஞ்சாபின் பொதுப் பிரிவில் தான் நடைபெறுகின்றன.”
ஆண்களின் கல்வி போதாமையாலும் , ஐஇஎல்டிஎஸ்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததாலும், பெண்களை திருமணம் செய்து கொண்டு கனடா செல்ல நினைக்கிறார்கள் இந்த ஆண்கள்.
ஆனால், பெண்கள் கனடா சென்ற பிறகு அவர்கள் இருவரின் சிந்தனைகளிலும் உள்ள வித்தியாசம் நிலைமையை சிக்கலாக்கி, பிரச்னையை உண்டு செய்வதாக தெரிவிக்கிறார் அவர்.
பிபிசி தமிழ்