50,000 மக்கள், 4 கழிப்பறைகள்… காஸா பகுதியின் தற்போதைய நிலை
காஸா பகுதி நிவாரண முகாம்களில் பணியாற்றிய நர்ஸ் ஒருவர், அங்குள்ள மக்களின் தற்போதையை பரிதாப நிலையை அம்பலப்படுத்தியுள்ளார்.
காஸா பகுதியில் தங்கியிருக்கும் பாலஸ்தீனிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாங்கள் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தாலும் அங்கே தங்கிவிட முடிவு செய்த ஹீரோக்கள் என குறிப்பிட்டுள்ளார் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிய அமெரிக்க நர்ஸ் ஒருவர்.
@ap
Emily Callahan என்ற அந்த நர்ஸ் தெரிவிக்கையில், காஸா பகுதியில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று தற்போது இல்லை என்றார். கடந்த புதன்கிழமை காஸா பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கலாஹான் வார இறுதியில் அமெரிக்கா திரும்பியிருந்தார்.
அவரிடம் தனது அனுபவம் குறித்து கேட்கப்பட்டபோது, கடந்த 26 நாட்களில் முதல் முறையாக பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன் என்றார். ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து, பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் கொடூர தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது.
கலாஹான் தெரிவிக்கையில், காஸாவில் தங்கியிருந்த 26 நாட்களில், பாதுகாப்பு காரணங்களுக்காக 5 முறை இடம் மாறும் நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். காஸாவில் முகம், கழுத்து, கைகால் முழுவதும் தீக்காயங்களுடன் குழந்தைகள் தவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளதால், காயமடைந்து சிகிச்சை நாடுபவர்கள் விரைவாகவே வெளியேற்றப்படுகின்றனர். மேலும், 50,000 மக்கள் தங்கியிருக்கும் ஒரு முகாமில் மொத்தமாக 4 கழிப்பறைகள் மட்டுமே செயல்படுவதாகவும், நாளுக்கு 4 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதாகவும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி அமெரிக்க நாட்டவர் என்பதால் பாலஸ்தீன மக்கள் தன் மீது கோபத்தை வெளிப்படுத்திய சம்பவங்களும் நடந்தது என்றார். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாலஸ்தீன மக்களுக்கு உதவ தாம் காஸாவுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் Emily Callahan தெரிவித்துள்ளார்.