இஸ்ரேல் தாக்குதலில் ஒரே இரவில் கொல்லப்பட்ட 200 பேர்
காஸா மீதான இஸ்ரேலில் கண்மூடித்தனமான தாக்குதலில், ஒரே இரவில் 200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ படைகள் தெரிவித்துள்ளன.
காஸா பகுதியில் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 30 நாட்களாக போர் நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம், காஸாவுக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
@reuters
மட்டுமின்றி, காஸாவில் உள்ள தங்குமிடம், மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்கி வருகிறது. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பாலஸ்தீன மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது.
அமெரிக்கா, கனடா உட்பட பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களின் முழு ஆதரவை தெரிவித்துள்ளன. ஆனால் இந்த நாடுகளில் பெரும்பாலான மக்கள் பாலஸ்தீன ஆதரவு நிலையை எடுத்துள்ளனர்.
@reuters
இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும்நிலையில், அரபு மக்களின் கொந்தளிப்பும் அதிகரித்து வருகிறது. சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே இரவில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை காஸா பகுதியின் வடக்குப் பகுதியை மட்டுமே உள்ளடக்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@reuters
இதனிடையே, காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களைக் கொல்ல இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவிக்கிறது என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.