இரு ரயில்கள் மோதி விபத்து; இதுவரை 15 பேர் பலி
பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷில் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச் மாவடத்தில் இருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றப்பட்டு இருந்தது.
எக்ஸ்பிரஸ் ரயில் மெல்ல தண்டவாளம் மாறிக் கொண்டிருந்த போது, திடீரென வேகமாக வந்த சரக்கு ரயில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது.
இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தவர்களில் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.