வரவு-செலவுத் திட்ட உரையில் திருக்குறளை மேற்கோள்காட்டிய மலேசிய பிரதமர்
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று வெள்ளிக்கிழமை தமது வரவுசெலவுத் திட்டத்தின் மீதான உரையில் திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.
”இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” என்று திருக்குறளை தமிழில் எடுத்துக்கூறினார்.
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்க திறைசேரிக்கான வருவாயைப் பெருக்கி, அதை பாதுகாத்துத் திட்டமிட்டு செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் என்று மலாய் மொழியில் குறளுக்கு விளக்கமும் கூறியபோது பாராளுமன்றத்தினர் அவரது மொழிப் புலமையை வியந்து பாராட்டினர்.
சீன கன்பூசிய தத்துவஞானியான ‘மாஸ்டர் மெங்’ என்றழைக்கப்படும் மென்சியஸ் கருத்துகளையும் அன்வார் சுட்டிப் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் பிரதமராக பதவி வகிக்கும் காலத்திலும் அன்வார் திருக்குறளைத் தம் உரையில் எடுத்துக்காட்டிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்று மலேசிய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.