காஸாவுக்குள் அதிரடியாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம்…
காஸா மீது முழு அளவிலான படையெடுப்புக்கு முன்னர் பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு இஸ்ரேல் ராணுவம் மற்றும் டாங்கிகள் காஸா பகுதிக்குள் நுழைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் தாக்குதலை தொடங்கி இது 7வது நாள். கடுமையான வான் தாக்குதலை நடத்தி வந்துள்ள இஸ்ரேல், தற்போது காஸா பகுதிக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹமாஸ் தீவிரிவாதிகள் மற்றும் அவர்களின் ஆயுத குவியல்களை மொத்தமாக அழிப்பதே தங்களின் நோக்கம் எனவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஆனால் காஸா மீது முழு அளவிலான படையெடுப்பை இதுவரை முன்னெடுக்கவில்லை என்றே இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
நாள் முழுவதும் காஸா பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்துள்ளது. இந்த நிலையில் ஈரான் மற்றும் ஹெஸ்புல்லா ஆகிய இருவரிடமிருந்தும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுவரையான இஸ்ரேல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவே முக்கிய ராணுவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இதனிடையே, இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்புவிக்க காஸா பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில் மக்கள்தொகை அதிகம் உள்ள பாலஸ்தீனப் பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ், கடைசித் துளி ரத்தம் வரை போராடப் போவதாக உறுதியளித்தது. ஆயிரக்கணக்கான காஸா பகுதி இளைஞர்கள் தெரிவிக்கையில், வெளியேறுவதை விட மரணம் சிறந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
பிறந்த இடத்தில் மண்ணுக்காக மரணமடைவதை விட சிறந்த பேறு உண்டா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே, மசூதிகள் ஒலிபரப்பு ஊடாக, உங்கள் வீடுகளையும், உங்கள் நிலத்தையும் கைவிடாதீர்கள் என மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
அக்டோபர் 6ம் திகதி ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து இதுவரை 1,300 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கொடூர தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேல், பாலஸ்தீன மக்களில் 1,800 பேர்களை கொன்றுள்ளது.
மட்டுமின்றி, 400,000 பேர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.