இரட்டையர்களுக்கு ஒரே நாளில் திருமணம் ஒரே நாளில் பிரசவம்!

கேரளாவில் ஒரே நாளில் திருமணம் நடந்த இரட்டை சகோதரிகளுக்கு, ஒரே நாளில் பிரசவமும் நடந்திருப்பது அதிசயத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் பிறந்த குழந்தைகளுக்கு ஒரே குரூப் ரத்தம் என்பது மேலும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே தலயோலபரம்பு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் நாயர். மனைவி அம்பிகா. இவர்களுக்கு 1995, அக்டோபர் 11ம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ரூபிரியா, ரூலட்சுமி என்று பெயரிட்டனர். இருவரும் ஒன்றாகவே வளர்ந்தனர். பள்ளியில் தொடங்கி கல்லூரியில் பிகாம் முடித்து சி.ஏ வரை இருவரும் ஒன்றாகத்தான் படித்தனர்.

ஒரே போலத்தான் உடை அணிவார்கள். இவர்களை அடையாளம் காண்பது சிரமம். பெற்றோர், திருமணம் குறித்து பேசுகையில், 2 பேருக்கும் ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணம் நடக்க வேண்டும் என்று இரட்டை சகோதரிகள் ஆசைப்பட்டனர். அவர்கள் நினைத்தபடியே கடந்த வருடம் டிசம்பர் 11ம் தேதி, கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் நடந்தது. ரூபிரியாவின் கணவர் வினூப், கொல்லத்தை சேர்ந்தவர். கோவையில் உள்ள ஒரு பிஸ்கட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ரூலட்சுமியின் கணவர் ஆகாஷ் நாத், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு வேறு வழியில்லாமல் பிரிந்து, இருவரும் அவரவர் கணவர்களின் வீடுகளுக்கு சென்றனர். ஆனாலும் தினமும் பலமுறை போனில் பேசி வந்தனர். இந்நிலையில் முதலில் ரூபிரியா கர்ப்பம் அடைந்தார். அடுத்த ஒரு சில தினங்களிலேயே ரூலட்சுமியும் கர்ப்பிணியானார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். அதிலும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தை பெற்று கொள்ள விரும்பினர். இதையடுத்து அதே மருத்துவமனையில் உள்ள டாக்டர் ரெஜியிடம் சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்களுக்கும் ஒரு சில நாட்கள் இடைவெளியில் பிரசவ தேதி குறிக்கப்பட்டது.

இந்நிலையதில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ரூபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு ரூலட்சுமிக்கும் பிரசவ வலி ஏற்பட்டதால் அவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் சுமார் 2.20 மணியளவில் ரூபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மாலை 6.45 மணிக்கு ரூலட்சுமியும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது மருத்துமனையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் பிறந்த குழந்தைகளும் ஒரே ரத்த குரூப்தான். அதுவும் ஓ பாசிட்டிவ்.

இதுகுறித்து டாக்டர் கூறுகையில், பிரசவ நேரத்தில் பல அதிசயத்தை பார்த்துள்ளேன். இப்படி ஒரு அதிசயத்ைத பார்த்ததில்லை. 2 பேருக்கும் சுகப்பிரசவம்தான் என்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றாகும் என்றார். இரட்டை சகோதரிகள் கூறுகையில், எங்களுக்கு ஒரே நாளில் குழந்தைகள் பிறந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது மன ஒற்றுமை காரணமாக நடந்திருக்கலாம். நாங்கள் இணை பிரியாது வளர்ந்தது போல, எங்கள் குழந்தைகளும் வளரட்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *