காசாவில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் 7,900 மக்கள்
இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் காயமடைந்த சுமார் 7,900 பேர் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 7ம் திகதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆரம்பித்தனர். சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலால், இஸ்ரேல் நிலை குலைந்து போனது. சற்று நேரத்தில் சுதாரித்த இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக பதில் தாக்குதலை ஆரம்பித்தது.
காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல்
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கையில்,
“காசாவிற்குள்ளே 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதல் எதிரொலியால் பாதுகாப்பான இடங்களில் பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்தனர்.
பெரும்பாலான மக்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி கிடையாது. சுகாதாரமற்ற நீரை மக்கள் பருகுவதால் நீரினால் பரவும் நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.” என சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவிக்கையில் ”பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து பல லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இதனை இஸ்ரேல் திரும்ப பெற வேண்டும். ஏனெனில் இந்த முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.