இஸ்லாமிய நாடுகள் ஹமாஸ் இயக்கத்தை முழுமையாக ஆதரிக்காதது ஏன்?

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் அடுத்தடுத்த பதிலடி நடவடிக்கை குறித்து மேற்கத்திய நாடுகள் ஒரே குரலில் பேசுவதாகத் தெரிகிறது.

ஆனால், பொதுவாக பாலத்தீனத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கும் இஸ்லாமிய நாடுகள், இந்த முறை எச்சரிக்கையுடன் நடந்து கொள்கின்றன.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இந்த நாடுகளின் நிலைப்பாட்டில் முரண்கள் உள்ளன.

இந்த நாடுகள் சுதந்திரமான பாலத்தீனிய அரசை ஆதரித்துள்ளன, ஆனால் முன்பைப்போல, இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பதைத் தவிர்த்து வருகின்றன.

ஈரானைத் தவிர, பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் ஹமாஸை வெளிப்படையாக ஆதரிப்பதைத் தவிர்த்துள்ளன.

இஸ்ரேலுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஹமாஸின் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டில், இஸ்ரேல் மற்றும் இரண்டு அரபு நாடுகளான பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே முறையான உறவுகளை ஏற்படுத்த ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பல முஸ்லிம் நாடுகள் இதற்கு ஆதரவாக உள்ளன.

இஸ்லாமிய நாடுகளின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பதற்கு பதிலாக எச்சரிக்கையாக எதிர்வினையாற்றியுள்ளது.

பாலத்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள நிலத்தில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை குறித்து கவலையடைவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஹமாஸ் ஆயுதக்குழுவை சாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

காசா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஓஐசி, “இஸ்ரேல் இந்தப் பிரச்சனைக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தீர்வைக் காணத் தவறிவிட்டது” என்று கூறியுள்ளது.

“பாலத்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் தினசரி குற்றங்களின் தீவிரம் காரணமாக, அவர்களின் நிலம் மற்றும் இறையாண்மை பறிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதுதான் அங்கு நிலையற்ற தன்மைக்குக் காரணம். மோதலுக்கு இஸ்ரேலிய ‘ஆக்கிரமிப்பு’ தான் காரணம் என்று குற்றம் சாட்டியது.

இஸ்ரேல் தரப்பிலிருந்து தாக்குதலை நிறுத்தி அமைதியை மீட்டெடுக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், ஓஐசி.யின் முக்கியமான உறுப்பினரான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்த வன்முறைக்கு பாலத்தீன இயக்கமான ஹமாஸை குற்றம்சாட்டியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா பகுதிக்கு அருகில் உள்ள இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் மோதல் பயங்கர வடிவம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

“ஹமாஸ், மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசியுள்ளது. இஸ்ரேலிய மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டது வருத்தத்திற்குரியது என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம்” தெரிவித்துள்ளது.

இரு தரப்பு குடிமக்களும் சர்வதேச சட்டங்களின் கீழ் முழு பாதுகாப்பைப் பெற வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.

இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அதைத் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், பாலத்தீனியர்கள் அதில் மகிழ்ச்சியடையவில்லை.

இஸ்ரேல் ராணுவத்திற்கும் பல்வேறு பாலத்தீன குழுக்களுக்கும் இடையிலான மோதலை உன்னிப்பாக கவனித்து வருவதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.

சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில்,

“வன்முறையை கைவிடுமாறு இரு தரப்பையும் சௌதி அரேபியா கேட்டுக்கொள்கிறது” என்று கூறியுள்ளது.

இதனுடன், இரு தரப்பிலும் உள்ள குடிமக்களின் பாதுகாப்பை மீட்டெடுக்கவும், நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சௌதி அரேபியாவின் அறிக்கையில், “காசா பகுதியில் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பது இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் பாலத்தீன மக்களின் சட்ட உரிமைகளைப் பறித்ததன் விளைவாகும்.” எனக் கூறியுள்ளது

துருக்கியின் நிலைப்பாடு என்ன ?

பொதுவாக இஸ்ரேலுக்கு எதிராக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கும் துருக்கி, இம்முறை மென்மையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிலவும் மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ள துருக்கி, அந்தப் பகுதியில் விரைவில் அமைதியை நிலைநாட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வன்முறை அதிகரிப்பதால் இரு தரப்புக்கும் பலன் இல்லை” என்று கூறியுள்ளது.

“நிலைமையைக் கட்டுப்படுத்த துருக்கி எப்போதும் உதவத் தயாராக உள்ளது. இஸ்ரேலும் பாலத்தீனும் இரு நாடுகள் என்பதை நிரூபித்துள்ளது இந்த சோக சம்பவம். இந்த அணுகுமுறையின் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. வன்முறைப் பாதையை விட்டுவிட்டு நிரந்தரத் தீர்வை நோக்கிச் செயல்படுமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்,” என அதில் கூறியிருந்தனர்.

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்துவான் பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், “1967 எல்லைகளின் அடிப்படையில் சுதந்திரமான மற்றும் புவியியல் ரீதியாக ஒன்றுபட்ட பாலத்தீன அரசை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அந்த பாலத்தீனத்தின் தலைநகர் ஜெருசலேம் (கிழக்கு). பாலத்தீனம்-இஸ்ரேல் மோதலை முடிவுக்கு கொண்டுவர உறுதியான தீர்வு ஒன்றே மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த முடியும்,” என எர்துவான் கூறியுள்ளார்.

கத்தார் என்ன சொன்னது?

ஓஐசி.யின் உறுப்பினரான கத்தாரும் அமைதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலைக் கவனித்து வருவதாகக் கூறியுள்ளது.

கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோதலை அதிகரிக்க வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கத்தார் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதி மேலும் வன்முறைச் சுழலில் சிக்காமல் இருக்க இரு தரப்பினரும் வன்முறையைக் கைவிட வேண்டும். அமைதி மற்றும் நிலையற்ற தன்மையை மீட்டெடுப்பதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கத்தார் கூறியுள்ளது.

மலேசியாவும் இந்தோனேசியாவும் என்ன சொல்கிறது?

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் குறித்து மலேசியா கவலை தெரிவித்துள்ளது.

“இந்த இக்கட்டான நேரத்தில் இனி உயிர் பலியாகக் கூடாது” என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“நடைபெற்றுக் கொண்டிருக்கும் அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு இரு தரப்பினரும் சமாதானத்துடனும் நிதானத்துடனும் செயற்பட்டு மோதலை நிறுத்தும் நோக்கில் செல்ல வேண்டும். எனினும், இந்தப் பிரச்னைக்கான மூல காரணத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் மலேசியா கூறியுள்ளது.

இதுகுறித்து மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், ‘‘பாலத்தீனர்களின் நிலம் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. அவர்கள் தடைகள் மற்றும் பிற பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அல்-அக்ஸா மசூதி இழிவுபடுத்தப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல் குறித்து கவலை தெரிவித்ததோடு, வன்முறையை உடனடியாக நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், பாலத்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்ததே இந்தப் பிரச்னைக்கு அடிப்படைக் காரணம் என்றும் இந்தோனேஷியா கூறியுள்ளது.

இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடக தளமான X இல், “இந்த பிரச்சனையை எப்படியாவது தீர்க்க வேண்டும். பாலத்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதால் எழுந்துள்ள பிரச்னைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் தரத்திற்கு ஏற்ப தீர்வு காண வேண்டும்.”

பாகிஸ்தானின் நிலைப்பாடு ஒரே இரவில் மாறிவிட்டது

இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு ஒரே இரவில் மாறியதாகத் தோன்றியது.

முன்னதாக அவர் இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை எதிர்க்கவில்லை. அதேபாேல, பதிலடி கொடுத்த இஸ்ரேலிய ராணுவத்தையும் அது கண்டிக்கவில்லை.

ஆனால், இப்போது பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் பாலத்தீனத்திற்கு தெளிவாக ஆதரவளித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலத்தீனத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் நிற்கிறது, இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகளின் வன்முறை மற்றும் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்று கூறியுள்ளது.

வெளியுறவு அமைச்சக அறிக்கையில், “பாகிஸ்தான் எப்போதும் இரு நாடுகளின் கொள்கையை அங்கேயே முன்வைத்து வருகிறது. இதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்த முடியும்,”என்று பாகிஸ்தான் கூறியது.

சர்வதேச சட்டத்தின்படி பாலத்தீனப் பிரச்சனைக்கு நியாயமான மற்றும் விரிவான தீர்வு காண்பதன் மூலம் மட்டுமே இங்கு நிரந்தர அமைதியை மீட்டெடுக்க முடியும் என்றும் பாகிஸ்தான் கூறியது.

பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவு நிலைப்பாடு என்ன?

இஸ்ரேல் மற்றும் பாலத்தீன விவகாரம் தொடர்பாக பங்களாதேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “இந்த மோதலால் யாரும் பயனடையப் போவதில்லை என்று நாங்கள் நம்புகிறோம்.

அந்தப் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதாலும், பாலத்தீனத்தில் இஸ்ரேலின் சட்டவிரோதக் குடியேற்றங்களாலும் அமைதியை நிலைநாட்ட முடியாது என்று பங்களாதேஷ் நம்புகிறது.

எனவே, பங்களாதேஷ் இரு நாடு கொள்கையை ஆதரிக்கிறது.” என கூறியது

மாலைத்தீவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முகமது மொய்சு, பாலத்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு சமூக ஊடக தளமான X இல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலத்தீனத்தின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பை இஸ்ரேல் உடனடியாக அகற்ற வேண்டும். தவிர, ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன நிலத்தையும் திரும்பக் கொடுக்க வேண்டும். கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலத்தீனத்தை சுதந்திர நாடாக இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும். அது 1967 எல்லைகளின் அடிப்படையில் ஜெருசலேமை பாலத்தீனத்தின் தலைநகராக அங்கீகரிக்க வேண்டும்.

ஹமாஸ் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை ஈரான் ஆதரித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் காசி ஹமாத், இந்தப் பிரச்சாரத்திற்கு ஈரானின் ஆதரவு உள்ளது என்று கூறினார்.

மறுபுறம், ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரின் அறிக்கை மற்றும் தெஹ்ரானில் இருந்து சமூக ஊடகங்களில் வரும் கொண்டாட்டத்தின் படங்களும் இதை உறுதிப்படுத்துகின்றன.

பிபிசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *