இறந்து பிறந்த குழந்தை – தகன மேடையில் உயிர் பிழைத்த அதிசயம்!

 

அசாம் மாநிலத்தில் இறந்து பிறந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட குழந்தை ஒன்று, தகன மேடையில் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

சில்சார் பகுதியை சேர்ந்த ரத்தன் தாஸ் என்பவர், செவ்வாயன்று மாலை தனது கர்ப்பிணி மனைவியை அங்குள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். கர்ப்பிணியை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பகால சிக்கல் அதிகரித்து இருப்பதாகவும், தாய் – சேய் இருவரில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்றும் ரத்தன் தாஸிடம் தெரிவித்தனர்.

உயிருக்கு உயிரான மனைவியை என்னால் இழக்க முடியாது என்று கண்ணீரோடு ரத்தன் தாஸ் கூறவே, அன்று இரவே அவரது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆண் குழந்தை ஒன்று இறந்து பிறந்ததாக, அட்டைப் பெட்டியில் அதனை வைத்து ரத்தன் தாஸிடம் மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நாள் காலையில் தந்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட ரத்தன் தாஸ், உறவினர்களுடன் சில்சார் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றார். இறுதிச் சடங்குகளுக்காக அட்டைப் பெட்டியை பிரித்து குழந்தையின் ‘சடலத்தை’ தகன மேடையில் வைத்தார். அப்போது திடீரென குழந்தை வீறிட்டு அழவே அங்கிருந்தவர்கள் களேபரமடைந்தனர்.
உடனடியாக குழந்தையை அள்ளிக்கொண்டு மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். குழந்தை உயிரோடு இருப்பதை மருத்துவர்கள் ஆச்சரியத்தோடு உறுதி செய்தனர். மேலும் குழந்தைக்கு அவசியமான அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே இந்த தகவல் பரவியதில் உள்ளூர்வாசிகள் ஒன்று திரண்டு, தனியார் மருத்துவமனைக்கு எதிராக போராட்டம் நடத்தியதோடு காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். பிரசவத்தில் அலட்சியமாக இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 8 மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகே குழந்தையின் இறப்பை உறுதி செய்ததாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *