பல நாடுகளிலிருந்தும் இலங்கை குரங்குகளுக்கு கேள்வி
சீனாவைத் தவிர ஏனைய பல நாடுகள் தமது உயிரியல் பூங்காக்களுக்கு Toque macaque வகை குரங்குகளை வழங்குமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த நாடுகளின் தொடர்புபட்ட தூதரகங்கள் மூலம் அந்த கோரிக்கைகளை விடுக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேராவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” குரங்குகளை ஏற்றுமதி செய்வதை சவாலுக்கு உட்படுத்தி மிருக உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதனால் கோரிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, குரங்கு, காட்டுப்பன்றி, மயில் போன்ற விலங்குகளினால் வருடாந்தம் 20 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பயிர் சேதம் ஏற்படுகின்றன.
குரங்கு ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் கலந்துரையாடி பயிர் சேதத்தை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும் அவர்கள் எந்த நடைமுறை தீர்வும் காணவில்லை.” என தெரிவித்துள்ளார்.