பெண்களினால் கடத்தப்பட்ட பெண்!

 

மாரவில கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த பிரித்திகா சாந்தனி என்ற பெண் கொச்சிக்கடை பிரதேசத்தை சேர்ந்த 2 பெண்களால் நேற்று இரவு கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னிடம் பணம் பெற்ற இரண்டு பெண்கள் தன்னை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்.

அதற்கமைய, கடத்தப்பட்டவர்கள் தன்னிடம் பணத்தைக் கோருவதால், பணத்தை எடுத்துக்கொண்டு தன்னை மீட்க வருமாறு கணவரிடம் கூறியுள்ளார்.

கணவர் மாரவில பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த பெண்ணை கண்டுபிடிக்க மாரவில பொலிஸ் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசேட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொச்சிக்கடை, தளுவகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், பெண்ணைக் கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கொச்சிக்கடை தலுவகொடுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயது மற்றும் 42 வயதுடைய இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட பெண் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சம்பந்தப்பட்ட இருவரிடமும் 12 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டதாக கைது செய்யப்பட்ட இரு பெண்களும் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட பெண் உடல் நலக்குறைவு காரணமாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட மேலும் நால்வரைக் கண்டறியும் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *