இந்திய ரூபாயின் பெறுமதி வரலாறு காணாத அளவுக்கு சரிவு!
அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 10 பைசா குறைந்து, 83.14 ரூபாய் என்ற நிலைக்கு சரிந்து உள்ளது.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 21ம் திகதியும், 83.13 ரூபாய் எனும் அளவிலான சரிவை கண்டது. நேற்று முன்தினம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா சரிவடைந்து, 83.04 ரூபாய் என்று வர்த்தகமானது.
இந்நிலையில், நேற்று வர்த்தக நேர முடிவில், மேலும் 10 பைசா சரிந்து, 83.14 ரூபாய் என்ற நிலைக்கு இறங்கியது. இது, இதுவரை இல்லாத சரிவாகும்.அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்தது மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை, ரூபாயின் மதிப்பை மேலும் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 90 அமெரிக்க டாலரை கடந்து, அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7,470 ரூபாய்க்கும் மேல் வர்த்தகமாகியது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை சூழலில், வர்த்தகர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி சென்றதாலும், சீனாவின் சேவைத்துறை குறியீடு, கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்ததாலும், அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.