கச்சத்தீவை மீட்க கோரி தீர்மானம் நிறைவேற்றம்!
மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற அ.தி.மு.கவின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான கச்சதீவை மீட்டெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த திமுக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அத்துடன் திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 32 தீர்மானங்களும் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாடு அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் இன்று நடைபெற்றது.
மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
கச்சதீவை மீட்க கோரி தீர்மானம் நிறைவேற்றம் – தி.மு.க அரசு மீதும் கடும் விமர்சனம் | Aiadmk Golden Jubilee Conference
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியை கட்டாய பாட மொழியாக்கவும் பயிற்று மொழியாக்கவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தல் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து அட்டவணை மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக கொண்டு வர மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை புதுச்சேரி மாநிலம் என்று நிலை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்துவதுடன், அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடு விழா நடத்தும் திமுக அரசுக்கு கண்டனமும் வெளியிடப்பட்டுள்ளது.
வரிச்சுமை, மின்கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்கும் மற்றும் ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ளச்சாராயம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமாக மற்றும்அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடன் வாங்கிய மாநிலங்கள்
கச்சதீவை மீட்க கோரி தீர்மானம் நிறைவேற்றம் – தி.மு.க அரசு மீதும் கடும் விமர்சனம் | Aiadmk Golden Jubilee Conference
இரண்டு ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவிலேயே கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ் நாட்டை முதல் மாநிலமாக்கிய திமுக அரசு, தமிழ் நாட்டு விவசாயிகளை வஞ்சிப்பதாகவும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
மேக தாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டிக்காமல் காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவிற்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஆளும் திராவிட முன்னேற்றம் கழகம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்