வௌிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடு!

வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

03 முறைகள் மூலம் இந்த வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் முறையில், வெளிநாடு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

நிலமற்ற பணியாளர்களுக்கு நகர்ப்புறத்திற்கு வெளியே அவர்கள் விரும்பும் பகுதியில் வீடுகள் கட்டி கொடுக்கப்படுவது இரண்டாவது முறையாகும்.

மூன்றாவது முறை அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பதாகும்.

இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நிதியுதவி வழங்குவதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளமானது வீட்டுத் தேவையிலுள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பில் ஏற்கனவே கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளதுடன், சுமார் 1,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வீடுகள் தேவைப்படும் வௌிநாட்டு பணியாளர்களின் குடும்பங்கள் குறித்தும் மாவட்ட அளவில் தகவல் திரட்டப்பட்டு வருவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *