இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்த விஷேட பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கையில் இந்திய ரூபாயை செல்லுபடியாகும் நாணயமாகப் பயன்படுத்தும் இரு தரப்பு ஆலோசனை நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் சுமார் 200 வருடங்களாக வாழும் பெருந்தோட்ட தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்தியாவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (22.07.2023) ஜனாதிபதியின் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரணில் விக்ரமசிங்க, ஜூலை 20 அன்று, புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணத்தை ஆரம்பித்தார்.

இலங்கையில் இந்திய பல்கலைக்கழகங்கள்
இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்த விசேட பேச்சுவார்த்தை: வெளிவிவகார அமைச்சர் கருத்து | 200 Years Upcountry People Ranil Speech

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த விஜயத்தின் போது நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது குறித்தும், இலங்கையில் இந்திய பல்கலைக்கழகங்களை நிறுவுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை ஆகியவற்றிற்குத் தேவையான புதிய தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கு இந்தியாவுடன் இணங்கிக்கொள்ளப்பட்டது. அதற்காக ஒரு கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், இலங்கை கடற்றொழிலாளர்களை இந்திய கடல் வழியாக அரபிக்கடலுக்கு செல்ல அனுமதிப்பதுடன், நீண்ட காலமாக இலங்கையின் வட கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இழுவை மீன்பிடி நடைமுறைகளை தடை செய்வது குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, பரஸ்பர பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்திய வளர்ச்சி

இலங்கையின் நெருங்கிய மற்றும் நீண்டகால நட்பு நாடான இந்தியாவுடன் புரிந்துணர்வு உறவைக் கட்டியெழுப்புவது இரு நாடுகளுக்கும் அதேபோன்று பிராந்தியத்துக்கும் மிகவும் நல்லதொரு நிலையாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களில் உலகின் மொத்த வளர்ச்சியில் 2/3 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஏற்படும் என்பது இன்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயம்.

மேலும் இந்தியாவும் சீனாவும் அதில் முன்னிலை வகிக்கும் என்பது எவ்வித விவாதமும் இன்றி சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள உண்மையாகும். எனவே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய அபிவிருத்தி வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை உற்றுநோக்கினால், அந்நாடுகள் இணைந்து செயற்பட்டதன் காரணமாக முழு ஐரோப்பிய பிராந்தியமும் வளர்ச்சியடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான்.

சீனாவைப் போலவே, அமெரிக்கப் பிராந்தியமும் அதே முறையில் அபிவிருத்தியடைந்தது. இந்த அபிவிருத்தி வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கருடன் கலந்துரையாடிய பின்னர், இந்தியாவின் தலைமை பாதுகாப்பு ஆலோசகருடனும் கலந்துரையாடப்பட்டது. அதன் பின், ஜனாதிபதி, இலங்கை தூதுக்குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த காலத்தில் நாம் சந்தித்த பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா எங்களுக்கு பாரிய உதவிகளை வழங்கியது. நிதி நிவாரணம் வழங்கியதோடு குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைத்துவத்தையும் வழங்கியது.

இந்தக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நாம் நிறைவு செய்ய வேண்டும். அதற்கான இந்தியாவின் ஆதரவை நாங்கள் தொடர்ந்து பெற்று வருகிறோம். இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் இந்திய பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

மேலும், நமது இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவையொட்டி, நமது பொருளாதார, சமூக மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கை அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு முதலீடுகள் தேவைப்படுவதுடன், அந்த முதலீடுகளின் ஊடாக சந்தை வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயற்பட்டால், இரு நாடுகளும் பெரும் நன்மைகளை பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்திய பிரதமருடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அரசாங்கங்களுக்கிடையில் மாத்திரமன்றி தனியார் துறைகளுக்கிடையிலும் உடன்பாடுகளை எட்டுவதற்கு தேவையான பின்னணி குறித்து ஆராயப்பட்டது.

இந்திய ரூபாயை இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இங்கு பரிசீலிக்கப்பட்டதுடன், அதற்கான ஏற்பாடுகள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் மீண்டும் பணத்தை ஏனைய நாணய அலகுகளுக்கு மாற்றாமல் எளிதாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பளிப்பதே இதன் நோக்கமாகும்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் அதற்காக ஒத்துழைப்பு

இந்தியாவும் சிங்கப்பூரை இவ்விதம் கையாண்டு இரு நாடுகளும் பெரும் பயன்களை அடைந்துள்ளன. மேலும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிகச் சிறந்த உறவை எவ்வாறு பேணுவது என்பது குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.

இப்போது இந்தியாவுக்கும் பலாலி விமான நிலையத்துக்கும் இடையில் தினசரி விமான சேவைகள் உள்ளன. எதிர்காலத்தில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். மேலும், உள்நாட்டு விமான சேவைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் அதற்காக ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாத்துறையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவதில் சுற்றுலா கப்பல் சேவையை (Cruise Tourism) மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.

இது இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு துறையாக இருப்பதுடன், இதன் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இன்று தென்னிந்திய பிராந்தியம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியை, இலங்கைக்கு பயனளிக்கும் வகையில், துறைமுகங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு நாட்டுத் தலைவர்களும் இனங்கண்டுள்ளனர்.

துறைமுகங்களுக்கு இடையே இந்த உறவுகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது பற்றி துறைசார் நிபுணர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டும். இது குறித்து கலந்துரையாடி விடயங்களை ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவது குறித்து தலைவர்கள் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

இவ்விடயங்கள் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் விரிவாக கலந்துரையாடிய பின்னர், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்மானிப்பதன் அவசியம் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தேசிய மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்டு பூர்த்தி செய்யும் திறன் உள்ளது.

அதன் பிறகு மேலதிகத்தை ஏற்றுமதி செய்ய ஒரு சந்தை வேண்டும். எனவே இதன் மூலம் பாரிய நிதியை பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். நமது சூரிய சக்தி மற்றும் காற்று வலு போன்றவற்றை ஏற்றுமதிக் கைத்தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ளத் தேவையான சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் எமக்குப் பாரிய தேவை உள்ளது.

கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினை

அதுபற்றி இங்கு விரிவாக கலந்துரையாடினோம். மேலும், இதன்போது இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் கலந்துரையாடினோம். இந்நாட்டு விவசாயத்துக்காக தொழில்நுட்ப அறிவைப் பெறுவது மிகவும் முக்கியம்.

கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்கான தொழில்நுட்ப அறிவைப் பெறுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டோம். இன்று இந்தியா டிஜிட்டல்மயமாக்கலில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இலங்கையில் டிஜிட்டல்மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கு இந்தியாவிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளை பெறுவது குறித்தும் நாம் ஆராய்ந்தோம்.

மேலும், இந்திய பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், இந்திய முன்னணி பல்கலைக்கழகம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு அவசியமான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக மக்கள் இந்நாட்டுக்கு வந்து சுமார் 200 வருடங்கள் கடந்துள்ளன. அவர்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை செயல்படுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதுடன், இந்திய அரசாங்கம் அதற்காக 750 மில்லியன் இந்திய ரூபாயை முதலீடு செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நுவரெலியா பிரதேசத்தில் பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பது குறித்தும், அது தொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. வடக்கில் இழுவைப் படகுகளை கொண்டு மீன்பிடிப்பதை நிறுத்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் இதன்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இந்திய எல்லையைத் தாண்டி அதற்கு அப்பால் செல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.

இரு தரப்பினரும் ஒன்றிணைந்து தொடர்ந்து கலந்துரையாடுவதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்து சமுத்திர பிராந்தியம் முழுவதையும் பாதுகாப்பான வலயமாக எவ்வாறு பராமரிப்பது மற்றும் பரஸ்பர பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத விடயங்களை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் கூட்டாக செயல்படுவது குறித்தும் இரு தரப்பும் இணக்கப்பாட்டுடன் கலந்துரையாடப்பட்டது.” என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *