உச்சத்தை தொட்ட வெப்பநிலை பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து!

உலகில் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகின்றது.

இதனால் பூமிக்கு மிகப்பெரிய பேராபத்து வரப்போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பத்தின் அளவு புதிய உச்சத்தை தொட்டது. இது மனிதர்களின் நடவடிக்கையினாலேயே நடக்கிறது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பருவநிலை மாற்றம் காரணமாகவே திடீரென கொட்டித் தீர்க்கும் மழை, கோடைக்காலத்தில் அதிக வெப்பம் என பல பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.

என்னதான் இந்த பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வந்தாலும், இதில் எவ்விதமான பெரிய முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.

எதிர்வரும் ஆண்டுகளில் இது மேலும் சூடாக மாறும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே மற்றொரு பிரச்சினையாக, உலகின் சராசரி வெப்பநிலை உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஜூலை மூன்றாம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17 பாகை செல்சியஸை முதன்முறையாகத் தாண்டி இருக்கிறது.

வெறும் 17 டிகிரி தானே என சாதாரணமாக நினைக்க வேண்டாம். உலகின் தென் மற்றும் வட துருவங்களில் வெப்பம் மைனஸ் டிகிரிக்கு கீழ் இருக்கும். அப்படி இருக்கையில் உலகில் ஒட்டுமொத்த சராசரி வெப்பம் 17 டிகிரியைத் தொட்டுள்ளது ஆபத்தானதாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே உலகின் வெப்பம் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை இந்த அளவுக்கு வெப்பம் எப்போதும் அதிகமானதில்லை.

இதற்கு ‘எல் நினோ’ வானிலை நிகழ்வுதான் காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், பூமியில் கரியமில வாயுவும் அதிகரித்து வருகிறதாம். இது தொடர்ந்து அதிகரித்தால் பூமியின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *