செயற்கை போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு ஐ.நா.எச்சரிக்கை!
உலகெங்கும் செயற்கை போதைப்பொருள் புழக்கம் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் போதைப்பொருள், குற்றத் தடுப்புப் பிரிவு இது தொடர்பில் எச்சரித்துள்ளது.
2021ஆம் ஆண்டு உலக அளவில் போதைப்பொருள்களைப் புழங்கியவர்கள் எண்ணிக்கை சுமார் 300 மில்லியனாகும். அதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட அது 23 சதவீதம் அதிகம்.
போதைப்புழக்கத்தால் அவதியுறுவோர் எண்ணிக்கையும் அதே காலக்கட்டத்தில் 45 சதவீதம் கூடி ஏறக்குறைய 40 மில்லியனானது. Fentanyl போன்ற செயற்கை போதைப்பொருள்களை எளிதில் தயாரிக்க முடியும். அதில் பல்வேறு இரசாயனக் கலவைகள் உள்ளன.
இதனால் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவற்றைக் கொண்டுவருவதும் சிரமமாகலாம். தென் அமெரிக்காவின் மிகப் பெரிய நகரான சாவ் போலோ போதைப்புழக்கத்தால் சீர்கெட்டுவரும் இடங்களில் ஒன்றாகியுள்ளது.
நகரின் சமுதாய, பொருளியல் நிலை போதைப்புழக்கத்தால் மோசமாகியுள்ளது. அது வர்த்தகத்தையும் குடியிருப்பாளர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது.
உலக நெருக்கடிகளும் பூசல்களும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகள் அதிகரிக்க எந்த அளவு காரணமாகியுள்ளன என்பதையும் அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியது.
போதைப்புழக்கத்தைத் தடுக்கத் தீவிர நடவடிக்கைகள் தேவை என்று அறிக்கை வலியுறுத்தியது.