மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்த ஆதிபுருஷ்!

பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.340 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும் இப்படம் வசூல்ரீதியாக சாதனை படைத்து வருகிறது. ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.140 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது நாளில் படம் ரூ.240 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில் முதல் மூன்று நாட்களையும் சேர்த்து படம் உலக அளவில் ரூ.340 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *