கல்முனை விவகாரம் மரணத்தறுவாயில் உள்ள நோயாளியை ஆராய குழு நியமிக்கும் முட்டாள்தனம்!
கல்முனை விவகாரம் உட்பட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கூடி அம்பாறை மாவட்ட முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தையும் பற்றி கலந்துரையாடியதுடன் கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்திற்கான தீர்வை எட்டும் விதமாக உபகுழுவொன்றை இன்று நியமித்துள்ளதாக செய்தி கூறுகிறது.
ஒருவன் நோயாளியாக பலவருடங்கள் கிடந்து தவிக்கும் போது பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அந்த மனிதனின் மரணத்தறுவாயில் அவனின் நோயை ஆராய குழு நியமிக்கும் முட்டாள்தனம் தான் இது.
கல்முனை உப செயலக பிரச்சினை என்பது 1987ம் ஆண்டு முதல் உள்ள பிரச்சினை. கிட்டத்தட்ட 2000ம் ஆண்டு முதல் இப்பிரச்சினை பூதாகரமாக உருவாகியது.
இப்பிரச்சினையிலிருந்து கல்முனையை காப்பாற்றப்போகிறோம் என கூறியே முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று ஆட்சியை பிடித்தது.
நேற்று வரை கல்முனை மற்றும் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் அதிக வாக்குகள் பெற்ற கட்சி ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ்தான்.
2015 முதல் 2020 வரை நல்லாட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சகல அதிகாரங்களுடன் இருந்த போது இதோ கல்முனை பிரச்சினைக்கு தீர்வு காணப்போகிறோம் என ஷோ காட்டினார்கள்.
அப்போது ஹக்கீம் கெபினட் அமைச்சராகவும் ஹரீஸ் மாகாண சபை உள்ளூராட்சி பிரதி அமைச்சராகவும் இருந்தார். இவர்கள் நினைத்திருந்தால் ஒரு கெபினட் பேப்பர் மூலம் கல்முனையை மூன்றாக பிரித்திருக்க முடியும், கல்முனை உப செயலகத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்திருக்க முடியும். வேண்டுமென்றே தேர்தல்கால பிச்சைக்காரன் புண் போல் ஆக்கிவிட்டனர்.
தமிழ் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையான ரவூப் ஹக்கீம் நினைத்திருந்தால் இப்பிரச்சினைக்கு எப்போதோ தீர்வு கண்டிருக்கலாம்.
அப்போதெல்லாம் ஹகீமின் அத்தனை ஏமாற்றுக்கும் துணைபோனவர்களுக்கு இப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து குழு அமைத்துள்ளனர்.
ஒன்றை உறுதியாக சொல்கிறோம். அம்பாரை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கல்முனை பிரச்சினையை தீர்க்காமல் இழுத்தடித்த துரோகத்துக்காக ரவூப் ஹக்கீமையும் முஸ்லிம் காங்கிரசையும் முதலில் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். இப்பிரச்சினையை தீர்க்காமல் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்துக்கு வரக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
இல்லாவிட்டால் அடுத்த தேர்தல் வரை இதேபடத்தை ஓட்டி தேர்தல் முடிந்ததும் முஸ்லிம்களின் வாக்குகளை விற்று மீண்டும் தூங்கி விடுவார்கள்.
இத்தகைய மோசமானவர்களை பகிரங்கமாக கண்டிக்கும் முதுகெலும்பு பள்ளிவாசல் சம்மேளனத்துக்கு இல்லவே இல்லை.
முபாறக் மௌலவி
ஐக்கிய காங்கிரஸ் கட்சி.