இளவரசர் ஹரிக்கு போதைப் பொருள் சோதனை!

பல வகையான போதை மருந்துகளை உட்கொண்டதாக இளவரசர் ஹரி ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவர் கிரீன் அட்டை பெறவோ அல்லது அவர் அமெரிக்க குடியுரிமை பெறவோ இனி வாய்ப்பில்லாமல் போகும் என சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.

ஆபத்தான போதை மருந்துகள்
அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள ஆபத்தான போதை மருந்துகளை தாம் முன்னர் உட்கொண்டுள்ளதாக இளவரசர் ஹரி வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருமாறியுள்ளது. போதை மருந்து பழக்கம் கொண்ட ஹரி எவ்வாறு அமெரிக்காவில் வசிக்க விசா பெற்றார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

பொதுவாக இவ்வாறான சிறப்பு விசா பெறுவதற்கு தொடர்புடைய நபர்களின் போதை மருந்து பயன்பாடு தொடர்பில் கடுமையான விசாரணை முன்னெடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால் ஹரி தாம் போதை மருந்து பயன்படுத்தியுள்ளதை வெளிப்படையாக கூறியுள்ள நிலையில், கடுமையான போதைப்பொருள் எதிர்ப்பு விதிகளின் கீழ் அவர் நீண்ட காலம் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

இதனிடையே, விதிவிலக்கான சூழ்நிலைகள் இல்லாமல் ஹரி ஒருபோதும் கிரீன் கார்டை வைத்திருக்கவோ அல்லது அமெரிக்க குடிமகனாகவோ முடியாது என முதன்மை சட்டத்தரணி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் பேட்டிகள் மற்றும் நூல்களில் வெளியிடும் கருத்துகளை உத்தியோகப்பூர்வமானதாக கருத முடியாது என்றாலும், நெருக்கடியான சூழலில் அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டால் அவருக்கு சிக்கல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமையற் கலைஞரான நிகெல்லா லாசன் ஒருமுறை போதை மருந்து பழக்கம் தொடர்பில் ஒப்புக்கொண்டதன் நான்கு மாதங்களுக்கு பிறகு, 2014ல் லண்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட தயாரானவருக்கு பயணத் தடை விதித்தனர்.

இதே நிலை தான் மறைந்த பாடகி ஆமி வைன்ஹவுஸ் என்பவருக்கும் ஏற்பட்டது. போதை மருந்து பழக்கம் தொடர்பில் வெளிப்படையாக குறிப்பிட்டுருந்த ஆமி வைன்ஹவுஸ் 2008ல் கிராமி விருது விழாவில் பங்கேற்க அமெரிக்கா அனுமதி மறுத்தது.

மேலும், போதை மருந்து பழக்கம் தொடர்பில் ஹரி சமர்ப்பித்துள்ள தரவுகள் புதிதல்ல என்பதால், மீண்டும் அவர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்குள் ஒருமுறையேனும் மது அல்லது போதை மருந்து பழக்கத்தால் ஹரி கைதாகியுள்ளதாக தூதரக அதிகாரிகள் கண்டறிந்தால் மட்டுமே மருத்துவ சோதனைகளுக்கு அவர் பரிந்துரைக்கப்படுவார்.

மட்டுமின்றி, ஹரி விவகாரம் தற்போது ஊடக கவனத்தை ஈர்த்துள்ளதால், அதிகாரிகள் தரப்பு இளவரசர் ஹரிக்கு மருத்துவ சோதனை முன்னெடுக்க பரிந்துரைக்கலாம் எனவும் சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக, தமது போதை மருந்து பழக்கம் தொடர்பில் அதிகாரிகளிடம் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தது, எதிர்காலத்தில் விசாவுக்கு அனுமதி கோரும்போது சிக்கலில் முடியும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *