உலகின் முதல் மிதக்கும் கால்பந்து திடல்
தாய்லந்தில் உள்ள கோ பான்யீ (Koh Panyi) தீவில் விசித்திரமான ஒரு முயற்சி… மிதக்கும் காற்பந்துத் திடல்…
1986ஆம் ஆண்டு அங்குள்ள கிராமத்தில் வசித்த பிள்ளைகள் பலகைகளையும் ஆணிகளையும் வைத்து உலகின் முதல் மிதக்கும் காற்பந்துத் திடலை உருவாக்கியதாக The Thaiger செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விளம்பரம்
மெக்சிகோவில் இடம்பெற்ற உலகக் கிண்ணப் போட்டியைக் கண்ட பிறகு பிள்ளைகளுக்கு அந்த யோசனை தோன்றியது.
காற்பந்து விளையாடுவதில் அதிக நாட்டம் இருந்தும் அங்கு விளையாடுவதற்குத் தகுந்த இடம் இல்லை.
கிராமத்தில் இருந்த பெரியவர்களும் அவர்களின் கனவைப் புரிந்துகொள்ளவில்லை.
ஆனாலும் மனம் தளராமல் கனவை நனவாக்க முடிவெடுத்தனர் பிள்ளைகள்.
மிதக்கும் காற்பந்துத் திடலைக் கட்டிமுடித்த பிறகு அங்கு விளையாடிப் பயிற்சி செய்ய ஆரம்பித்தனர்.
விளம்பரம்
தகுந்த உபகரணங்களும் காலணிகளும்கூட இல்லாத காற்பந்துக் குழு, இளையர்களுக்கான Phanga கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்று மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
அதையடுத்து 2004ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடையே நடத்தப்பட்ட இளையர்களுக்கான 7 காற்பந்துப் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றனர் பான்யீ காற்பந்துக் குழுவினர்.
இன்றும் அந்தக் காற்பந்துக் குழு தாய்லந்தின் மிகத் திறமைவாய்ந்த அணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று The Thaiger தெரிவித்தது.
இன்று சிறந்த விளையாட்டு உபகரணங்கள், சிறந்த பொருள்களால் கட்டப்பட்ட மேலும் 2 மிதக்கும் காற்பந்துத் திடல்கள் உள்ளன. இருந்தும் அக்குழுவினர் காலணிகள் இல்லாமல் விளையாடுவதையே விரும்புகின்றனர்.
குழுவாகச் செயல்பட்டால் எந்தக் கனவும் நிறைவேறும் என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர்.