சென்னையில் மட்டன் பிரியாணியில் பூனை கறியும் கலந்து விற்பனை!

சென்னையில், சில சாலையோர பிரியாணி கடைகளில் மட்டன் பிரியாணியில் பூனைக்கறியும் கலந்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளில் ரெய்டு நடத்தினர். அப்போது பிரியாணிக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த 11 பூனைகளை பறிமுதல் செய்தனர். சென்னை சுற்றுப்புற பகுதியில் உள்ள சாலையோர பிரியாணி கடைகளில் ஆட்டிறைச்சியுடன், பூனை இறைச்சியும் கலந்து விற்பனை செய்யப்படுவதாக, விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல்துறையினர் உதவியோடு, சென்னை பாரிமுனையை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு பூனைகள் கழுத்தில் மணி கட்டப்பட்டு அலங்காரத்துடன் இருந்தது. இதனையடுத்து, வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் திருடப்பட்டு கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு இருந்த 11 பூனைகளை காவல்துறையினரின் உதவியோடு, வன விலங்கு தன்னார்வலர்கள் மீட்டனர். பிறகு, மீட்கப்பட்ட 11 பூனைகளை திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்குகள் பாதுகாப்பு நிறுவனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ராணி கூறியதாவது:

தற்போது பல்லாவரம், பொன்னேரி, பெசன்ட்நகர், அம்பத்தூர், அயனாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நரிக்குறவர்கள் பூனைகளைப் பிடித்து ஒரு பூனை ரூ. 1000 விற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதில், கருப்பு பூனைகளின் ரத்தத்தை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. மேலும், கோழி, ஆடுகளின் இறைச்சிகளின் விலை உயரும்போது, பிரியாணிக்காக பூனைகளை கொன்று பிரியாணி சமைக்க பயன்படுத்துகின்றனர். கலப்பட பிரியாணி விற்கும் சிலருக்கு இந்த நரிகுறவர்கள்தான் பூனைகளை சப்ளை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *