காதல் தோல்வியில் இருந்து மீள புதிய திட்டம் அறிமுகம்!
காதலர்கள் கொண்டாடும் நாளாக மட்டும் அல்லாமல் முன்னாள் காதலர்களை மறக்கும் நாளாகவும் காதலர் தினத்தை மாற்றியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த உயிரியல் பூங்கா நிர்வாகங்கள் விலங்குகள் நலத்திற்காக அவர்கள் முன்னெடுத்துள்ள வித்தியாசமான முயற்சி. உலகம் முழுவதும் அன்பை கொண்டாடும் விதமாக காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒரு பக்கம் காதலர்கள் டேட்டிங், சினிமா என இந்த நாளை கொண்டாடும் நிலையில் இன்னும் சிலர் தோழி இல்லையே, தோழன் இல்லையே என புலம்பி கொண்டிருக்கிறார்கள்.
அவர்களையும் முன்னாள் காதலில் அடைந்த தோல்வியிலிருந்து மீள முடியாமல் இருப்பவர்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளும் வகையில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த உயிரியல் பூங்காக்கள் பென்சில்வேனியாவில் உள்ள லேஹி பள்ளத்தாக்கு பூங்கா பக் ஆப் என்ற பெயரில் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு பூச்சிகள் உணவாக அளிக்கப்படும். தங்களை கைவிட்டு சென்ற முன்னாள் காதலர் அல்லது காதலியின் பெயரை இந்த பூச்சிகளுக்கு வைக்கலாம் என பூங்கா அறிவித்துள்ளது.
ஒரு பூச்சிக்கு பெயர் வைக்க இந்திய மதிப்பில் ரூ.420 கட்டணமாக பெறப்படுகிறது. மனதை உடைத்து சென்றவர்கள் பெயரை விலங்குகளுக்கு அளிக்கப்படும் பூச்சிகளுக்கு வைத்து அவர்களை மறப்பதே இந்த திட்டத்தின் முயற்சி. இதேபோல டெஸ்சஸில் உள்ள சான் ஆண்டனியோ பூங்காவிலும் உணவாக அளிக்கப்படும் காய்கறிகள், பூச்சிகளுக்கு பெயர்வைக்கலாம். காய் ஒன்றிற்கு பெயர் வைக்க ரூ.420 கரப்பான் பூச்சிக்கு பெயர்வைக்க ரூ.830 எலிக்கு பெயர்வைக்க ரூ.2000 வரை வசூலிக்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது விலங்குகள் பராமரிப்புக்கு நிதி திரட்ட இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. தற்போது அமெரிக்காவில் உள்ள சிறு சிறு பூங்காக்கள் இதன் மூலம் நிதி திரட்டி வருகின்றன.
…